Header Ads



மீள்குடியேறிய யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்வி கேள்விக் குறியாகியுள்ளதா..?

-  Jan Mohamed  -

2003 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக மீள்குடியேறிய யாழ் முஸ்லிம்கள் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் குடியேற்றத்தில் ஒரு முன்னேற்றம் காணப் பட்டது. 35 மாணவர்களுடன் ஆரம்பிக்கப் பட்ட ஒஸ்மானியா 450 மாணவர்களைக் கொண்டதாக் மாறியது. தொடர்ந்து ஹதீஜா கல்லூரி தனியாக ஆக்கப் பட்டது. 

ஒஸ்மானியாவின் கல்வித் தராதரமும் முன்னேறி வந்தது. க.பொ.த சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேறுகள் வெளியாகின. ஒஸ்மானியாவில் ஓ எல் வரை கல்வி கற்ற 6 இக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் வேறு பாடசாலைகளில் உயர்தரம் கற்று இன்று பட்டதாரிகளாக மிளிர்கின்றனர். 

ஆனால் இந்த வருடம் வெளியாகிய 2019 டிசம்பர் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் பாராட்டக் கூடியதாக அமையாததால் மக்களும் கல்வியில் அக்கறையுள்ளவர்களும் ஆடிப் போயுள்ளனர். தவறு மாணவர்கள் பக்கமா? ஆசிரியர்கள் பக்கமா? அல்லது சமூகத்திலா அல்லது நிர்வாகப் பிரச்சினையா என பல கேள்விகள் அக்கறையுள்ளவர்கள் மத்தியில் நிலவுகின்றது. இது தற்காலிக பின்னடைவா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. 

பாடசாலையில் அலவுக்கு மிஞ்சிய தலையீடுகள் காரணமாக அமைந்திருக்குமோ என்று யாரும் சிந்திக்கவில்லை. அவ்வாறான பல அழுத்தங்கள் பாடசாலை நிர்வாகம் மீது செலுத்தப் பட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.  சமையலில் பாண்டித்தியம் பெற்ற பலரை ஒரு விருந்தை சமைக்க விட்டால் அவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த சமையலின் ருசியை கெடுத்து விடுவார்கள். 

ஆளாலுக்கு பணத்தையும் உதவியையும் வழங்கிவிட்டு  நான் சொல்வதை நீ கேள் என்று அழுத்தம் கொடுத்தால் அங்கு பல சிக்கல்கள் உருவாகும். அவரைச் சேர்க்காதே இவரைச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் கூறி சுய புத்தியில் மற்றவர்களை செயல்பட விடாமல் தடுப்பது மிக மோசமான செயலாகும். 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை சகலரும் ஞாபகம் வைத்துக் கொண்டு மெற்கொண்டு வாசிப்போம். 

யாழ்ப்பாண முஸ்லிம்களின் கல்வி என்பதை மன் ப உல் உலூம் பாலர் பாடசாலை, ஒஸ்மானியாக் கல்லூரி , ஹதீஜா கல்லூரி என்ற வட்டத்துக்குள் சிந்திப்பது சரியா? அல்லது ஒரு நளீம் ஹாஜியார் சிந்தித்த ஜாமியா நளீமியா, அல் இக்ரா தொழில்நுட்ப  கல்லூரி, குர் ஆன் மதரஸா என்ற வகையிலும் சிந்திப்பது நல்லதா? 

யாழ்ப்பாணத்தில் கல்வியில் பெரும் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதனை பல்வேறு கோணங்களில் சிந்தித்துத் தான் செயற்படுத்த வேண்டுமா என்ற கேள்வியும் எழுகின்றது. ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டுவிட்டால் அதற்கு தீர்வு சொல்வது இலகு. அதே போன்று என்ன நோய் என்று தெரிந்து விட்டால் அதற்கு வைத்தியம் செயவதும் இலகுவானது. 

எனவே யாழில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம்கள் மத்தியில் கல்வியில் காணப் படும் மந்த நிலைக்கு காரணங்கள் என்ன என்பதைப் பற்றிய கேள்விகள் அவசியம். அந்தக் கேள்விகளுக்கு விடையாக
* பாடசாலை சரியில்லை
*  மாணவர்களுக்கு கல்வியில் அக்கறையில்லை 
* ஆசிரியர்களுக்கு போதிக்க தெரியவில்லை 
* பாடசாலையில் வளங்கள் பற்றாக்குறை 
* பெற்றோர் பிள்ளைகளின் கல்வியில் கரிசனை செலுத்துவதில்லை 
* மாணவர்கள் காலதாமதமாக பாடசாலை வருவது ஒரு காரணம் 
* அதிக வெளித் தலையீடுகள் காரணமாக பாடசாலை ஆசிரியர்களும் நிர்வாகமும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி அக்கறைகள் குறைக்கப் பட்டுள்ளன

போன்ற பல்வேறு காரணங்களை பலரும் முன்வைப்பார்கள். இவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கலந்து ஆலோசிக்க வேண்டும்.

இன்று யாழ் முஸ்லிம் பிரதேச பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் அங்கு போதியளவு மாணவர்கள் இல்லை. முன்பு ஹதீஜாவும் ஒஸ்மானியாவும் ஒன்றாக இயங்கிய காலத்தில் காணப் பட்ட கல்வி எழுச்சி தனித்துச் சென்றதன் பின்னர் இல்லை. இதற்குப் பின்னால் அதிபர் மாற்றங்கள் ஆசிரியர் மாற்றங்கள் மாணவ கலாச்சார பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்களும் பங்களிப்புச் செய்துள்ளனவா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. 

ஒரு காலத்தில் பெயர் தெரியாமல் இருந்த கெகுனுகொல்ல பாடசாலை, வரகாபொல பாடசாலைகள் ஹொஸ்டல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து இன்று நூற்றுக் கணக்கான மாணவர்களை பல்கலைக் கழகம் அனுப்பி வைக்கின்றனர் என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.  அதே போன்று கொழும்பு ஸாஹிறா, புத்தளம் பாத்திமா, கல்முனை ஸாகிறா, கல்முனை பெண்கள் கல்லூரி, மாவனல்ல ஸாஹிறா இப்படி எத்தனையோ பாடசாலைகள் ஹொஸ்டல் வசதிகளைக் கொண்டிருக்கின்றன.  பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்களில் 25  முதல் 40 சதவிகிதமானவர்கள் வேறு ஊர்களில் பிறந்து வளர்ந்து மேற்படி ஊர்களிலுள்ள பாடசாலைகளின் ஹொஸ்டலில் தங்கிப் படித்து சித்தியடைந்து நுழைந்தவர்கள் என்பதை நாம் காண்கின்றோம். 

அப்படியென்றால் யாழ் மாணவர்களை மேற்படி பாடசாலைகளுக்கு அனுப்புவோமா என்ற கேள்வி எழும். அப்படியல்ல. யாழ்ப்பாணம் கல்வியில் பல்வேறு வளங்களைக் கொண்ட பூமி.  இலங்கையில் தலைசிறந்த ஆசிரியர்கள் பலரைக் கொண்டு பிரத்தியேக வகுப்புகள் இடம்பெறும் பூமி தான் யாழ்ப்பாணம். அங்குள்ள பல்கலைக்கழக  மாணவர்களில் திறமையானவர்களை நாம் பகுதி நேர ஆசிரியர்களாக உள்வாங்க முடியுமா என்றும் சிந்திக்க வேண்டும். 

மாணவர் தொகையை அதிகரிக்க நாடு முழவதுமுள்ள  திறமையுள்ள மாணவர்களை அனாதைகள் ஏழைகள் வசதி குறைந்தோர் போன்ற குடும்பங்களில் இருந்து உள்வாங்கி  ஹொஸ்டல் வசதிகளை செய்து கொடுத்து மாணவர் தொகையை அதிகரிக்க முடியுமா? 

அல்லது கும்பங்களை மீள்குடியேற்றி அதனூடாக மாணவர் தொகையை அதிகரிக்க முடியுமா? 
சமூகத்தில் காணப் படும் ஒழுக்க குறைபாடுகள் போதைவஸ்துகள் என்பவற்றை இருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களைக் கொண்டு நல்ல நிலமைக்கு மாற்றியமைக்க முடியுமா? 

மன் ப உல் உலூமை பாதுகாக்க 200 இக்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் தேவை. அந்த தொகையை எங்கிருந்து எப்படி பெறுவது?  அப்படி பெறாவிட்டால் பாடசாலை பறிபோகும் நிலையுள்ளதா? ( இதனை வேறு இடங்களில் கலந்தாலோசிக்க வேண்டாம். )

கல்வியில் முன்னேற யார் தடை என்பதை மீண்டும் சிந்திக்கவும். பாடசாலையில் நிலவும் குறைகளை நாம் உடனடியாக சுட்டிக்காட்டினால் மனமுடைந்து மோசமான முடிவுகளையும் சிலர் எடுக்கக் கூடும். எனவே கவனம் தேவை. 

வாராந்தம் இரண்டு பாடங்களுக்கு பரீட்சை வைத்தி அதில் சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்களை பாராட்டுவது ஏனையவர்களை ஊக்கப் படுத்துமா? 

வகுப்பில் கடைசியாக உள்ள மாணவன் / மாணவியை அடுத்தடுத்த மாதங்களில் தனது பாடத்தில்  முன்னேற்றிக் காட்டிய ஆசிரியர்களுக்கு பரிசில்களை வழங்குவது ஆசிரியர்களை ஊக்கப் படுத்துமா?  

வீட்டு பாடங்களை ஊக்கப்படுத்தும் பெற்றோர்களுக்கு விருதுகள் வழங்குவது ஏனைய பெற்றோரையும் ஊக்கப் படுத்துமா? 

சமூகத்தில் கல்வி சம்பந்தப் பட்ட நீண்ட கால இலக்குகள் எவை ? குறுகிய கால இலக்குகள் எவை? அதற்கான தடைகள் எவை? அவற்றை எப்படி வெற்றி கொள்வது?  சமூகத்தின் மத்தியில் பாடசாலை பற்றிய நம்பிக்கையை எப்படி ஏற்படுத்துவது?  

சிந்தியுங்கள் கருத்துக்களை எழுதுங்கள். கலந்துரியாடுவோம். யாரும் யாரையும் குறை காணாமல் நிறை கண்டு பயணிப்பதில் தான் வெற்றியுண்டு.

2 comments:

  1. தலை சிறந்த கல்விமான்களைப் பிரசவித்தும் தத்தெடுத்து வளர்த்தும் கரைகண்ட யாழ் பூமி இன்று வானம் பார்த்த பூமியாக வீழ்ந்து கிடக்கின்றமை கவலைக்குரிய விடயமே!நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய்ப் பாடசாலைகள் புகழின் உச்சத்தைத் தொடுவதில்லை.பாடசாலை என்பது சமூகச்சொத்து என்பதைப் போன்று சமூகமொன்றை உருவாக்கும் விளைநிலமுமாகும்.இன்று முகவரி இழந்து நிற்கும் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட எமது பாடசாலைகள் பற்பல சமூக ஆளுமைகளுக்கு மங்கா முகவரிகளை வழங்கிய பாரம்பரியம் பொருந்திய வரலாறுகளைக் கொண்ட கலாசாலைகளாகும்.யாழ் முஸ்லிம்களின் கல்வித் தாகத்திற்கு அருஞ்சுவைப்பானமாகத் திகழும் மேற்படிப் பாடசாலைகளை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல எம்மிடம் உள்ள பலம் என்ன? பலவீனம் என்ன? விதி வசத்தால் சறுக்கிய பாதையில் மீள எழுந்து வீறு நடை போட எமக்குள்ள சந்தர்ப்பங்கள் என்ன? அச்சுறுத்தல் என்ன? என்பவற்றை சமூக அக்கறையுடன் சிந்தித்து பாடசாலைகளின் குறுங்காலத் தேவைகள் எவை? நீண்ட காலத்தேவைகள் எவை? அவ்வாறான தேவைகளுள் அதி முக்கியமானதும் அவசரமானதுமானவை எவை? என்பவற்றை முன்னுரிமைக்கிரமமாகப் பட்டியற் படுத்தி சிறந்த திட்டமிடலுடன் சமூகத்தை வலுவூட்ட வேண்டும் முயற்சி திருவினையாக்கும்.
    R.F.MIZLY
    DEPUTY PRINCIPAL
    AL - IRFAN C.C
    POLGAHAWELA

    ReplyDelete
  2. தலை சிறந்த கல்விமான்களைப் பிரசவித்தும் தத்தெடுத்து வளர்த்தும் கரைகண்ட யாழ் பூமி இன்று வானம் பார்த்த பூமியாக வீழ்ந்து கிடக்கின்றமை கவலைக்குரிய விடயமே!நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய்ப் பாடசாலைகள் புகழின் உச்சத்தைத் தொடுவதில்லை.பாடசாலை என்பது சமூகச்சொத்து என்பதைப் போன்று சமூகமொன்றை உருவாக்கும் விளைநிலமுமாகும்.இன்று முகவரி இழந்து நிற்கும் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட எமது பாடசாலைகள் பற்பல சமூக ஆளுமைகளுக்கு மங்கா முகவரிகளை வழங்கிய பாரம்பரியம் பொருந்திய வரலாறுகளைக் கொண்ட கலாசாலைகளாகும்.யாழ் முஸ்லிம்களின் கல்வித் தாகத்திற்கு அருஞ்சுவைப்பானமாகத் திகழும் மேற்படிப் பாடசாலைகளை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல எம்மிடம் உள்ள பலம் என்ன? பலவீனம் என்ன? விதி வசத்தால் சறுக்கிய பாதையில் மீள எழுந்து வீறு நடை போட எமக்குள்ள சந்தர்ப்பங்கள் என்ன? அச்சுறுத்தல் என்ன? என்பவற்றை சமூக அக்கறையுடன் சிந்தித்து பாடசாலைகளின் குறுங்காலத் தேவைகள் எவை? நீண்ட காலத்தேவைகள் எவை? அவ்வாறான தேவைகளுள் அதி முக்கியமானதும் அவசரமானதுமானவை எவை? என்பவற்றை முன்னுரிமைக்கிரமமாகப் பட்டியற் படுத்தி சிறந்த திட்டமிடலுடன் சமூகத்தை வலுவூட்ட வேண்டும் முயற்சி திருவினையாக்கும்.
    R.F.MIZLY
    DEPUTY PRINCIPAL
    AL - IRFAN C.C
    POLGAHAWELA

    ReplyDelete

Powered by Blogger.