தலைமைத்துவ முரண்பாட்டால் ஐ.தே.க ஆதரவாளர்கள் நம்பிக்கையிழப்பு
தலைமைத்துவ முரண்பாடுகள் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி இன்று பல பிரிவுகளாகப் பிரிந்து சீர்குலைந்துள்ளதால் ஐ.தே.க ஆதரவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை அரவணைத்து, லங்கா பொதுஜன பெரமுனவின் பலத்தை அதிகரிக்க வேண்டுமென, விவசாயம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுன தேர்தல் காரியாலயத்தை எம்பிலிபிட்டியவில் திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது: கொரோனா தொற்று சூழ்நிலையின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட துணிகரமான தீர்மானங்களால் இன்று நாம் காப்பாற்றப்பட்டுள்ளோம்.
நாட்டுக்கு சரியான தலைமைத்துவம் கிடைக்காதிருந்திருந்தால் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி பலர் உயிரிழந்திருப்பர்.எமது அயல் நாடான இந்தியா இன்று இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.ஆனால் எமது ஜனாதிபதியின் முன்மாதிரியான நடவடிக்கைகளாலே பெருமைக்குரிய நாட்டு மக்களாக இன்று எம்மை உலகம் பேசுகிறது. மகாவலி வலயத்தின் முக்கியமான கேந்திர நிலையமாக எம்பிலிப்பிட்டிய விவசாய நிலம் கருதப்படுகிறது. எனினும் நீண்ட காலமாக இம்மக்களின் காணிகளுக்கு உறுதிகள் வழங்கப்படவில்லை.இதனால் மக்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இன்னும் ஆறு மாதங்களுக்குள் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(இரத்தினபுரி நிருபர்)
Post a Comment