Header Ads



பாராளுமன்றத்தை கூட்டச் சொல்வது தேர்தலுக்கு பயந்தோ, எமது தேவைகளை நிறைவேற்றவோ கிடையாது

(செ.தேன்மொழி)

உத்தியோகபூர்வமற்ற சந்திப்புகளால் எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை. அதனாலேயே பிரதமரின் அழைப்பை நிராகரித்ததாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, ராஜபக்ஷக்களின் செயற்பாடுகள் தொடர்பில் தான் நன்கு அறிந்தவர் என்றும், நெருக்கடியின் மத்தியிலும் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கே முயற்சிக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

அலரி மாளிகையில் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கலந்துரையாடல்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்துக் கொண்டிருந்ததுடன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டதுடன், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய சில செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்களை தெளிவுபடுத்தியிருந்தோம்.

ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் அவர்கள் துளியேனும் அவதானம் செலுத்தவில்லை. இவ்வாறான நிலையில் பிரதமரின் அழைப்பை ஏற்று மீண்டும் அலரிமாளிகைக்கு செல்வதால் எந்த பயணும் கிட்டப்போவதில்லை.

அரசாங்கத்தின் பலம் தொடர்பிலும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. மார்ச் மாதம் பாராளுமன்றம் களைக்கப்பட்டதை அடுத்து அரசாங்கத்தினால் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் எந்த விதமான நிதி ஒதுக்கீட்டையும் முன்னெடுக்க முடியாது. அவ்வாறு செயற்படுவதானது அரசியலமைப்பை மீறி முன்னெடுக்கும் செயற்பாடுகளாகும். அரசியலமைப்புக்கு அமைவாகவா அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜபக்ஷர்களின் பதவி மோகம் மற்றும் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் நான் நன்கறிவேன். 52 நாட்கள் அரசியல் நெருக்கடியின் போது முனானள் ஜனாதிபதியினால் வழங்கப்படும் பிரதமர் பதவியை பொறுப்பேற்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வளவோ எச்சரிக்கை செய்த போதும் பதவி மோகத்தில் அவர் அதனை பொறுப்பேற்றார். பின்னர் நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக அந்த பதவியை விட்டு விலகினார்.

பாராளுமன்றத்தை களைத்து விட்டு இவர்கள் இந்த நெருக்கடி நிலைமையிலும் தேர்தலை நடத்துவதற்கும்,  மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வது தொடர்பிலுமே சிந்தித்து வருகின்றனர். கொரோனா தொற்று தொடர்பான நெருக்கடி நிலைமைத் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும் அதனை இலங்கைக்குள் வராமல் தடுப்பதற்காக எந்த வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும்,  அலரிமாளிகையில் இடம்பெறும் உத்தியோகபூர்வமற்ற சந்திப்புகளால் நாட்டுக்கு பயன்தரும் எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட போவதில்லை.

இதேவேளை அரசாங்கம் கொரோனா பரவல் தொடர்பில் வெளியிடும் தகவல்கள் மற்றும் தரவுகள் தொடர்பிலும் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி இ பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து கலந்துரையாடி ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொதுச் செயலாளரும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தை கூட்டாது, அலரி மாளிகைக்கு அழைப்பு விடுப்பதற்கான காரணம் என்ன? பாராளுமன்றத்தை கூட்டச் சொல்வது தேர்தலுக்கு பயந்தோ? எமது தோவைகளை நிறைவேற்றிக் கொள்ளவோ கிடையாது. அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவே. வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததின் பின்னர் தேர்தலை தாராளமாக நடத்திக் கொள்ளலாம். இதன்போது அரசாங்கம் தேர்தலில் வெற்றியிடுவதற்கோ அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கோ முயற்சிக்கலாம்.

No comments

Powered by Blogger.