Header Ads



வெளியே வராத கர்ப்பிணித் தாய்க்கு, கொரோனா தொற்றியது எப்படி?

(எம்.எப்.எம்.பஸீர்)

களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட, பேருவளை பகுதியைச் சேர்ந்த  கர்ப்பிணிப் பெண்,  கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அங்கு அவர் பிரசவித்த குழந்தையுடன் , மேலதிக சிகிச்சைகளுக்காக மாலபே, நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு ( சைட்டம்) மாற்றப்பட்டுள்ளார்.  

இந்த சம்பவம் இன்று பதிவானது,

கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இன்றி, பிரசவத்துக்காக  நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  குறித்த 28 வயதான தாய்,  பிரசவ சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது தாதியர்,  அத்தாயின் ஊர் பெயரைக் கோரி, அதில் ஏற்பட்ட சந்தேகத்தில் செய்த பரிசோதனையின் போதே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா தொற்று உறுதியாகும் போதும் குறித்த தாய் குழந்தையை பிரசவித்திருந்த நிலையில், பிரசவ சிகிச்சைகளுக்கு உதவிய குறித்த வைத்தியசாலையில் 6  தாதியர் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்றுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய, அக்குழந்தையின் இரத்த மாதிரி பொரளை மருத்துவ ஆய்வு கூடத்துக்கு அனுப்பட்டுள்ளது.

இதனையடுத்தே  குறித்த தாயும், குழந்தையும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்கவென விஷேடமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாலபே, நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர்  விஷேட வைத்திய நிபுணர் மகேஷ் கருணாதிலக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் களுத்துறை - நகொட வைத்தியசாலை, பேருவளை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோரின் தகவல்கள் பிரகாரம் அறிய முடிவதாவது,

குறித்த 28 வயதான தாய் பேருவளை  பன்வில பகுதியிலிருந்து சற்று தொலைவாக உள்ள கிராமமொன்றில் வசித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பேருவளை அம்பேபிட்டிய பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று, அங்கு தனது இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு, கணவன், தாயாருடன் சென்றே களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக    அனுமதியாகியுள்ளார்.

அவ்வாறு வைத்தியசாலைக்கு உள் நுழையும் போது  பிரதேச பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. இந் நிலையில்,  வைத்தியசாலை நுழைவின் போது குறித்த பெண் தனது முகவரியை பேருவளை - அம்பேபிட்டி என தனது தயார் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார். அந்த முகவரியே, பி.எச்.டி. அட்டையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 பின்னர் பிரசவத்துக்காக பிரசவ அறைக்கு அழைத்து செல்லும் போது தாதி ஒருவர் அப்பெண்ணிடம் ஊர் பெயரை வினவிய போது அவர் பன்வில என தெரிவித்துள்ளார்.

 இதனால் தாதியர்கள் கலவரமடைந்துள்ளனர். ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பேருவளை பகுதியில் முடக்கப்பட்ட பிரதேசமாக பன்வில காணப்படுவதே அதற்கான காரணம்.

இந்நிலையிலேயே அப்பெண்ணுக்கு கொரோனா தொடர்பிலும்  பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்போதே அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதாக களுத்துறை - நாகொட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. எனினும் அப்போதும் அவர் குழந்தையை பிரசவித்திருந்துள்ளார்.

 பின்னர் குறித்த  தாய் தொடர்பில் விசாரணை செய்த போது,  அப்பெண் தனிமைப்படுத்தப்பட்ட பன்வில கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் வசிக்கின்றமை தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் சுமார் 30 வீடுகள் வரை மிக நெருக்கமாக உள்ளமை அவதனைக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதி முடக்கப்பட்ட பகுதியல்ல என பிரதேச மருத்துவ அதிகாரி குறிப்பிட்டார்.  

குறித்த தாய் வெளியே நடமாடுவது குறைவு எனவும்,  அனைத்து வெளித் தேவைகளையும் கணவரே பூர்த்தி செய்துள்ளமையையும்  சுகாதார பாதுகாப்புத் தரப்பினர் தேடியுள்ள நிலையில் அவருக்கு எவ்வாறு கொரோனா ஏற்பட்டது என ஆராய்ந்து வருகின்ரனர்.

அத்தாயின் வீடு அமைந்துள்ள சபா ஸ்கீம் எனப்படும் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறிய கடை ஒன்றுக்கு பன்வில பகுதி  மக்கள் பொருட் கொள்வனவுக்கு வருவதும், அக்கடைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வந்து சென்றுள்ளமை தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, அக்கடை உரிமையாளர் உள்ளிட்டோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அக்கடையிலேயே  குறித்த தாயின் கணவர் பொருட்களை கொள்வனவு செய்வது தெரியவந்துள்ள நிலையில், கொரோனா தொற்றாளரால்  பிடிக்கப்பட்ட பொருளொன்றினை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதன் ஊடாக அத்தாய்க்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகதாரத் துறையினர் சந்தேக்கின்றனர். இது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து வரும் சுகாதார தரப்பினர் தற்போது சபா ஸ்கிம்  மக்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர்.

No comments

Powered by Blogger.