Header Ads



ஜனாதிபதியிடம் 10 அம்சக் கோரிக்கையை வழங்கப்போகும் எதிர்க்கட்சி - தமிழ் பேசும் தலைமைகளும் கையொப்பம்

(ஆர்.யசி)

பொதுத் தேர்தல் உரிய திகதியில் நடத்தப்படாததை அடுத்து பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற பிரதான காரணி உள்ளடங்கலாக பத்து அம்சக் கோரிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையொப்பமிட தீர்மானித்துள்ள நிலையில்,மக்கள் விடுதலை முன்னணி கையொப்பமிட மறுப்பு தெரிவித்து வருகின்றது. எனினும் கையொப்பமிடப்பட்ட பத்து அம்சக் கோரிக்கை இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமெனவும், அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்காவிடாது எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடவும் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நாட்டில் தற்போது நிலவிவரும் கொவிட் -19 கொரோனா வைரஸ் நோய்பரவல் காரணமாக தீர்த்தலை பிற்போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் அமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்றுமாத கால எல்லைக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற நிலையில் ஜூன் மாதம் 2 ஆம் திகதி புதிய பாராளுமன்றத்தை கூட்டியாக வேண்டும். எனினும் தேர்தல் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ள நிலையில் பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதான எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் மிக்கியமான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சகல எதிர்க்கட்சிகளும் அதில் கையொப்பமிட்டு ஜனாதிபதியிடம் கொடுப்பதாகவும் அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்து பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். அந்தவகையில் அவர்கள் முன்வைத்துள்ள 10 அம்சக் கோரிக்கையானது,

1. கொவிட் -19 கொரோனா வைரஸ் காரணமாக உருவாகியுள்ள பொது சுகாதார இடரின் பின்னணியிலும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கையிலும் புதிய பல சவால்கள் தோன்றியுள்ளன. இத்தொற்றுநோய் பரவுவதை நாம் கட்டுப்படுத்தலாம் என்று சில நாள்களுக்கு முன்பு இருந்த நம்பிக்கை துரதிர்ஷ்டவசமாக இப்போது தளர்கிறது.இதன் பரவுதலை அடுத்த சில வாரங்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் பொருளாதார, சமூக, அரசியல் தளங்களிலும் நாடு பல இடர்களை சந்திக்க நேரிடும்.

2. நூற்றுக்கணக்கானவர்களுக்கு இது தொற்றியுள்ளது; பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். தங்களது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது முன்னிலை சுகாதார ஊழியர்கள் எம்மைப் பாதுகாப்பதற்காக அர்பணிப்போடு சேவை செய்கிறார்கள். எமது அரசியல் தீர்மானங்களினால் அவர்களது உழைப்பு வீண் போகக் கூடாது.

3. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இருப்பதாலும் தேர்தல் நடாத்துவதற்கு உகந்த சூழல் இல்லாத காரணத்தினாலும் குறிப்பாக நிலையற்ற அரசியல் நிலைமை காணப்படுகிறது. ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப் புதிய திகதி ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. நாட்டின் சுகாதார நிலைமை  மாற்றமடைவதன் அடிப்படையில் இத்திகதி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதையும் ஆணைக்குழு ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளது.

4. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நீதியும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழல் ஏற்படசாத்தியம் இல்லை என்று நாம் நியாயமாக தீர்மானிக்க முடியும். அண்மித்த காலத்தில் தேர்தல் ஒன்றை நடத்தி எமது மக்களை தேவையற்ற சுகாதார இடர் ஒன்றிற்குள் நாம் தள்ளவும் கூடாது. எமது நாட்டு மக்கள் எப்பொழுதுமே தேர்தல் பரப்புரைகளில் ஊக்கமாக பங்குபற்றி, பெரும் எண்ணிக்கையாக திரண்டு வாக்களித்து, ஜனநாயகத்துக்கான தமது அர்ப்பணிப்பைக் காண்பித்துள்ளார்கள். நீதியும் சுதந்திரமானதுமான தேர்தல் முழுமையான பிரச்சார நடவடிக்கையை உள்ளடக்க வேண்டும். இது நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவும் அபாயத்தை அதிகரிக்கும். கடந்த வாரத்தில் இந்த தொற்று அதிகரித்த விதத்தை நாம் அறிவோம்.

5. மற்றெல்லா ஜனநாயக நாடுகளைப் போலவே எமது நாடும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கல்துறை, நீதித்துறை என்ற மூன்று தனித்துவமான அதிகாரங்களை கொண்ட நிறுவனங்களால் ஆளப்படுகிறது. சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட் டுவதற்கு இம்மூன்று துறைகளும் இன்றியமையாதன. முன்னெப்போதும் சந்தித்திராத சவாலொன்று ஏற்பட்டுள்ள இவ்வேளையில் - மற்றைய நேரங்களை விட - இவற்றின் செயற்பாடுகள் அத்தியாவசியமாகின்றன. ஆனால் நாடாளுமன்றம் செயற்பாடற்று இருக்கும் இத்தருணத்தில் இந்த சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதியும் அரசமைப்பின் உறுப்புரை 70(7) இல் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரத்தை பிரயோகிக்க மறுக்கிறார். தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்படும் சூழலில் நாடாளுமன்றமும் நீண்ட காலத்துக்கு செயலிழந்து இருப்பதற்கான அபாயம் நிலவுகிறது.

6. இந்த இடரின் மத்தியில் எழுந்துள்ள பல அவசரமான ஆட்சி விடயங்களைதீர்த்து வைப்பதற்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டி அதன் மூலம் அரசியல் கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை பெறுவது சிறந்தது என்பது எமது உண்மையான நம்பிக்கையாகும். எழுந்துள்ள பொது சுகாதார சிக்கலுக்கு தேவையான புதிய சட்டங்கள் இயற்றுவதும், பொது நிதியிலிருந்து பணம் எடுப்பதற்கான நாடாளுமன்ற அனுமதி வழங்குவது என்பன நாடாளுமன்றம் செய்யக்கூடிய சில முக்கியமான, அவசர கடமைகளாகும்.

7. அண்மைக்காலத்திலே நிறைவு பெறுவதற்கு சாத்தியமில்லாத - முன்னெப் போதும் சந்தித்திராத - பேரிடர் ஒன்றுக்கு நாம் அனைவரும் முகங்கொடுக்கிறோம். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக இந்த சவாலை முறியடிப்பதற்கு ஜனாதிபதிக்கு எமது பொறுப்புணர்வு கலந்த ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த பேரிடரின் மத்தியில் நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தவிர்த்து செயற்படவேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் கடமை என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

8. மேற்கூறியவற்றை அடைந்து நாட்டில் ஆட்சியானது முறையாகவும் சட்டபூர்வமாகவும் அரசமைப்புக்கு உட்பட்டதாகவும் அமைவதற்காக, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்க நாம் தயார். இக்காலத்தில் எமக்கு சம்பளம் வேண்டாமென்றும், அரசாங்கத்தை கவிழ்க்க முனைய மாட்டோம் என்றும் அரசாங்கத்தின் எந்த சட்டபூர்வமான செயற்பாட்டுக்கும் தடங்கல் விதிக்க மாட்டோம் என்றும் நாட்டு மக்களுக்கு நாம் உறுதி கூறுகிறோம். ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமாக பிரகடனப்படுத்தாத போதும் அதைப் பேணுவதில் அரசாங்கத்துக்கு உதவிவழங்கி வருவதில் எமது நல்லெண்ணத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.

9. இந்த சூழ்நிலையில் பொறுப்புடனான ஒத்துழைப்பு வழங்கும் எமது எண்ணத்தை ஏற்று 2020 மார்ச் 2ஆம் திகதியிட்ட பிரகடனத்தை இரத்துச் செய்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரஸை அழிப்பதற்கும், அனைத்தும் சட்டபூர்வமாகவும் அரசமைப்புக்கு உட்பட்டும் நடைபெறு வதற்கும் ஆவன செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதியை நாம் கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட பின்பு ஜனாதிபதி நாடாளுமன்றத்தை மீண்டும் கலைக்க முடியும்.

10.மாற்று செயற்பாடாக, ஜனாதிபதி, குறைந்தது அரசியலமைப்பின் 70(7) ஆவது உறுப்புரையின் கீழ் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். பொறுப்புடனான ஒத்துழைப்புக்கான இந்த யோசனையானது எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் இதய சுத்தியோடு நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக மட்டுமே செய்யப்படுகிறது என்பதில் ஜனாதிபதி அவர்களும் முழு நாடும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

என்ற பத்துக் காரணிகளை உள்ளடக்கிய கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தலைமையிலான எதிரணிக் குழு உருவாக்கியுள்ள நிலையில் இந்த கோரிக்கைக்கு சகல எதிர்க்கட்சிகளும் கையொப்பமிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் சகல கட்சிகளும் இதில் கையொப்பமிட தீர்மானம் எடுத்துள்ள போதிலும் மக்கள் விடுதலை முன்னணி இன்னமும் தீர்மானம் எதனையும் எடுக்காதுள்ளது. இது குறித்து கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா கூறுகையில்,

ஜே.வி.பி நழுவல்

கூட்டு எதிர்க்கட்சியாக இணைந்து உருவாக்கியுள்ள இந்த பத்து அம்சக் கோரிக்கையை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கட்சியின் பொதுத் செயலாளர் டில்வின் சில்வா கூறினார். பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என்ற விடயத்தில் தாம் உறுதியாக உள்ள போதிலும் இன்னமும் குறித்த உடன்படிக்கையில் தாம் கையொப்பமிடவில்லை எனவும், இனியும் கையொப்பமிட நாம் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

முஸ்லிம் தலைமைகள் ஏற்றுக்கொண்டுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதில் கையொப்பமிட இணக்கம் தெரிவித்துள்ளதுடன் இன்றைய தினம் அவர்கள் குறித்த ஆவணத்தில் கையொப்பமிடவுள்ளனர். பழைய பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரணில் -சஜித் தரப்பும் இணக்கம்

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய மக்கள் சக்தி கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் உள்ளனர். ஆகவே இந்த பத்து அம்சக் கோரிக்கையில் அவர்களின் ஆதரவு இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதனை உறுதிப்படுத்தினார். இன்று அல்லது நாளைய தினங்களில் அவர்களும் குறித்த ஆவணத்தில் கையொப்பமிடவுள்ளனர். எவ்வாறு இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வழிநடத்தும் இந்த நடவடிக்கையில் இந்த வார இறுதிக்குள் குறித்த ஆவணம் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் வழங்கப்படும் என தெரிவிக்கும் அவர்கள் இதற்கு ஜனாதிபதி உரிய பதில் தர மறுத்தால் தாம் நீதிமன்றத்தை நாடி அரசியல் அமைப்பு மீறல் குறித்த தீர்ப்பு ஒன்றினை பெற்றுக்கொள்ள எண்ணியிருப்பதாகவும் கூறுகின்றனர். 

2 comments:

  1. தமது பென்ஷனுக்கும்,வருவாய்க்குமாக எடுக்கப்படும் முயற்சி இவர்களால் எந்த பயனும் இல்லை இந்த இரண்டு மாத காலம் எப்படி சிறப்பான வழிகாட்டல் மூலம் நாடு நடத்தப்பட்டதோ அதேபோன்று இந்த வருடம் முடியும் வரை தேர்தல் இல்லாது, பாராளமன்றம் இல்லாது சிறப்பாக நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்கும் காரணம் கள்வர்களும்,கொள்ளையர்களும் இல்லை

    ReplyDelete
  2. இதில் ஒரேயொரு கோரிக்கை மாத்திரமே உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.