சிறுபான்மை இனத்தவர்களை வேட்புமனுவில் இணைக்காமல், சிங்கள வாக்குகளை மாத்திரம் பெற அரசாங்கம் முயற்சி
(எம்.ஆர்.எம்.வஸீம்)
சிறுபான்மை இனத்தவர்கள் எவரையும் வேட்புமனுவில் இணைத்துக்கொள்ளாமல், அரசாங்கம் தனி சிங்கள வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவில் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் எவரையும் நியமிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அவர்கள் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, வெற்றிபெற்றதன் பின்னர் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள இருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த திட்டமானது, தேர்தல் பிரசாரத்தில் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத அடிப்படையில் வாக்குளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையாகும்.
பொதுத் தேர்தலில் எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அரசாங்கத்தின் சார்பில் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களை நியமிக்காமல், சிங்கள மக்கள் மத்தியில் இதனை பிரசாரம் செய்து, தனிச்சிங்கள வாக்குகளை பெற்றுக்கொள்ளவும் தேர்தலுக்கு பின்னர் இதனை காரணம் காட்டி சிறுபான்மை மக்களை அடக்குவதற்குமே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளை பார்க்கும்போதும் சிறுபான்மை மக்களை கண்டுகொள்ளாத வகையிலே இருக்கின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொராேனா வைரஸ் தொற்று இருப்பதா என பரீட்சித்து பார்க்க தெற்கில் அரசாங்க கட்டிடங்களை ஒதுக்கும்போது அதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக, சிறுபான்மை மக்கள் இருக்கும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை பலாத்காரமாக கைப்பற்றி, பயன்படுத்தி வருகின்றது என்றார்.
Post a Comment