அநுராதபுரம் சிறைச்சாலை, 6 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை, பாதுகாப்பை உறுதி செய்துள்ள பொலிஸார்
(எம்.எப்.எம்.பஸீர்)
அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற குழப்ப நிலையின் போது கொல்லப்பட்ட இரு கைதிகளில் ஒருவர், தலையை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார்.
இந்நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை, வன்முறை, தீ வைப்பு சம்பவங்கள் இன்று காலையாகும் போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அநுராதபுரம் பொலிஸாரால் சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன கூறினார்.
மொத்தமாக குறித்த வன்முறை, அமைதியின்மையின் போது 8 கைதிகள் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் இருவரே உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய, ஏனைய 6 பேரும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் சிறைச்சாலையின் பாதுகாப்பை பொலிஸார் தற்போது உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Post a Comment