Header Ads



புத்தளத்தில் 60 குடும்பங்கள், வீட்டுக் காவலில் வைப்பு

இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வந்து, புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் அடங்கிய 60 குடும்பங்கள், சுகாதாரச் சேவை அதிகாரிகளால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து பெப்ரவரி மாதம் இறுதி வாரத்திலும், மார்ச் மாதம் முதல் வாரத்திலும் இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்தோர், எவ்வித பாதுகாப்பும் இன்றி சுதந்தரமாக சுற்றித் திரிந்து கொண்டதனை அவதானித்த பொதுமக்கள் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸாரின் ஒத்துழைப்புக்களுடன் சுகாதார பரிசோதகர்கள் குறித்த நபர்களை சந்திந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களையும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது என சுகாதார அதிகாரிகளால் உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள், சுகாதாரச் சேவை அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேளாது, சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துள்ளனர் என்றும் இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வந்த 800க்கும் அதிகமானவர்கள், வென்னப்புவ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தங்கியுள்ளனர் என்றும் இவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் சுகாதாரச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் பலர், புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில், பல விருந்துபசாரங்களையும் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருவதாக, சுகாதாரச் சேவை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.