“கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தம்மை தனிமைப்படுத்தினால் 3 - 4 வாரங்களுக்குள் நிலைமையை கட்டுப்படுத்த முடியும்”
(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸினால் அதிகளவு மரணங்கள் பதிவாகக் கூடிய பாரதூரமான நிலைமை இலங்கையில் ஏற்படவில்லை. வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள் தாமாகவே அவர்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, ஏனையோரும் சுகாதார பழக்க வழக்கங்களை முறையாகக் கடைபிடித்தால் 3 - 4 வாரங்களுக்குள் நிலைமையை கட்டுப்படுத்த முடியும்.
என்று தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று -15- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாகும். எனினும் நீர், மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை விடுத்து ஏனைய நிறுவனங்கள் என்பவற்றை இரு வாரங்களுக்கு மூடுவதன் மூலம் விரைவான நன்மை பெற முடியும். இதனையே பிரான்ஸ் முன்னெடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் நலமாக உள்ள உடலில் உருவாகாது. ஆனால் தொற்றுக்குள்ளாகியுள்ள ஒருவரிடமிருந்து பிரிதொருவருக்கு மிக இலகுவாகப் பரவக் கூடியது. எனவே தற்போதைய நிலைமையில் சாதாரண இருமல் , காய்ச்சல் காணப்படுபவர்களிடமிருந்து ஏனையோர் விலகியிருப்பதே சிறந்ததாகும் என்றார்.
Post a Comment