Header Ads



அட்டலுகமயில் 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர், மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்

(எம்.மனோசித்ரா)

பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பண்டாரகம பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம என்ற பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இவர் சுமார் 26 நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார். அதற்கமைய மருத்துவ ஆலோசனைகளின் படி குறித்த 26 பேரும் அந்த பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் அந்த கிராமத்தவர்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. அந்த பிரதேசத்திலிருந்து வெளிச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்படுகிறது.

மேலும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள 26 பேரும் 14 நாட்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் உரிய சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

No comments

Powered by Blogger.