Header Ads



நாளைமுதல் வேட்புமனு விண்ணப்பங்கள், 2ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் வேட்புமனு விண்ணப்பங்கள் நாளை முதல் கோரப்பட உள்ளதாகவும், எதிர்வரும் மார்ச் 2ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின் புதிய கூட்டணியின் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இணைய விருப்பம் வெளியிட்டுள்ள அனைத்து கட்சிகளுடனும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட வருமாறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்ற போதிலும் கூட்டணி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி சின்னம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் உடன்படிக்கை கைச்சாத்திடும் வைபவத்திற்கு வெளிநாட்டு தூதுவர்கள், பிரதிநிதிகள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவம் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளதுடன், சஜித் பிரேமதாச தலைமையிலான இந்த கூட்டணியில் இணைய பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.