சகல தரப்பினருக்கும் எச்சரிக்கை - முஜிபுர் ரஹ்மான்
(செ.தேன்மொழி)
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கைது அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பதாக அமைந்துள்ளது. அரசாங்கம் சர்வாதிகாரத்தை பிரயோகிப்பதற்கான வெளிப்பாடாகவே இது அமையப்பெற்றுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்து இரண்டு மாதகாலத்தை அண்மித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்யும் வேட்டையில் இறங்கியுள்ளது. எமது ஆட்சிக் காலத்தின் போது செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை விமர்சிப்பது மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கைது செய்வதை மாத்திரமே நோக்கமாக கொண்டுள்ள அரசாங்கம் இதுவரையில் எவ்வித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்காமல் இருக்கின்றது.
முதலில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இரண்டாவது முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மூன்றாவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் அடுத்த இலக்கு யார் என்பது தொடர்பில் விரைவில் அறிந்து கொள்ள முடியும்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கைது நடவடிக்கைகளின் மூலம் எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது. சட்டவிரோத ஆவணங்கள், இறுவட்டுகள், கணணி தொடர்பில் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் மற்றும் அதன் தோட்டாக்களுக்கான அனுமதிப்பத்திரம் காலாவதியாகியுள்ளதாக குறிப்பிட்டே அவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பிஸ்டலுக்கான அனுமதிப் பத்திரம் வருடந்தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் நாங்கள் அறிந்திருக்க வில்லை. இதனை பாரிய குற்றச் செயலாகவும் நாங்கள் எண்ணவில்லை. ரஞ்சன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் பெரிதும் விமர்சனங்களுக்கு உட்படுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் என்றவகையில் அரசாங்கத்தின் பல அமைச்சர்கள், அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் என பலர் எம்மிடம் தொடர்புகொள்வார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தினால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பில் அவர்கள் எம்மிடம் தெரிவிப்பார்கள். இந்நிலைமை எமது ஆட்சிக்காலத்தின் போதும் இருந்தது. எங்களது ஆட்சியில் இடம்பெறும் தவறுகளை எங்களுடன் இணைந்து செயற்பட்ட தரப்பினரே எதிர்க்கட்சிக்கு தெரிவித்திருந்தனர். இந்த சந்தர்ப்பங்களின் போது எதிர்த்தரப்பினர் எம்மீது பெரும் விமர்சனங்களையும் மேற்கொண்டிருந்தனர். இது போன்ற செயற்பாடுகளை சட்ட விரோத செயற்பாடுகளாக கருதமுடியாது.
ரஞ்சனின் கைது அனைத்து அரச அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலே அமையப் பெற்றுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் அனைவருக்கும் அரசியல்வாதிகளின் கைது மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எதேச்சதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதற்கான வெளிப்பாடாகவே இது அமையப்பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றது. எமது தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலும் அரசாங்கம் ஆராய்ந்து பார்க்கின்றதா என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஏன் என்றால் ரஞ்சனின் வீட்டில் சோதனைகளை மேற்கொள்ள வந்த பொலிஸார் அவரது தொலைபேசி அழைப்பு தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றார்.
As we expected you will never and ever publish our comments against to him GOOD JOB ADMIN
ReplyDelete