கொரோனா தொற்று சந்தேகம், 23 பேர் IDH வைத்தியசாலையில் அனுமதி
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) முதல் அங்கொடையிலுள்ள தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக 8 நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, மூன்று நோயாளிகளின் அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டு உறுதிபடுத்தப்படாது உள்ளது என வைத்தியர் சமரவீர தெரிவித்துள்ளார்.
பெறப்பட்ட அறிக்கைகள் குறித்து மேலும் பேசிய அவர், 3 பேரில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏனைய இரண்டு பேருக்கு நோய்த்தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சீனப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கட்கிழமை (27) உறுதி செய்யப்பட்டதையடுத்து இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி பதிவு செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளான சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 47 வயதான சீனப் பெண் “பாதுகாப்பாக இருப்பதாக ” ஐ.டி.எச் வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜசிங்க நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனாவின் ஹான், ஹூவெங்ஹனெக், ஏஷூ ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் நாட்டிற்கு வருவதற்கான விசாவை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இரத்து செய்துள்ளது.
இதனைத் தவிர, சீனாவின் மேலும் 53 நகரங்களில் வசிக்கும் மக்கள், இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் விசாவுக்கு விண்ணப்பித்தல் அவசியம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்து.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விமான நிலையத்தில் அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment