கிறிஸ்மஸ் கேக்கில் வைத்து, ஹெரோயின் கடத்தியவர் கைது
நத்தாருக்காகத் தயாரிக்கப்பட்ட கேக் ஒன்றினுள் மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த, சந்தேக நபர் ஒருவரை கற்பிட்டி- பத்தலங்குண்டு தீவில் வைத்து கைது செய்துள்ளதாக, கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கற்பிட்டி கடற்றொழில் துறைமுகத்திலிருந்து புறப்படும் பயணிகள் படகில் பத்தலங்குண்டு தீவில் வசிக்கும் நபர் ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக கேக் ஒன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. படகில் ஒப்படைக்கப்பட்டிருந்த கேக்கினை பெறுவதற்காக பத்தலங்குண்டு தீவின் மீனவத் துறைமுகத்துக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளதாகவும், அவ்விளைஞர் ஹெரோயின் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அவ்விளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதையடுத்து, அவ்விளைஞர் கைது செய்யப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டிருந்த கேக்கும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கேக்கினை சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 சிறியளவிலான ஹெரோயின் பக்கட்டுக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரை இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment