Header Ads



UNP க்குள் தீவிரமடையும் உட்பூசல், ரணிலை விலக அழுத்தம், சஜித் தலைவராவதும் கடினம்

ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கக் கட்சி எதிர்கொண்ட படுதோல்வியை அடுத்து அரச தரப்பு பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய உட்கட்சிப் பூசல் உருவாகியுள்ளது. கட்சித் தலைமைத்துவத்திலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விலகுமாறு கட்சியின் பெரும்பான்மையானவர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.

ஐ. தே. க வுக்குள் உட்கட்சிப்பூசல் வலுவடைந்துள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சிகளுக்கிடையேயும் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இம்முன்னணி ரணில் அணி, சஜித் அணியென இரண்டாகப் பிளவுபடும் நிலைக்கு இக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. கட்சி இரண்டாக உடைவதை தவிர்க்க வேண்டுமானால், தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகி சஜித் பிரேமதாஸவுக்கு வழிவிட வேண்டியதன் அவசியத்தை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமைத்துவத்திலிருந்து விலக முடியாதென கடுமையான நிலைப்பாட்டிலிருக்கும் நிலையில், இன்று புதன்கிழமை கூடும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் மிக முக்கியமான தொன்றாக நோக்கப்படுகிறது.

அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த கபீர் ஷாஷிம், ரஞ்சித் மத்துமபண்டார, ஹரீன் பெர்ணான்டோ, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட பலரும் சஜித் பிரேமதாஸவுடன் நடத்திய சந்திப்பிலும் பிரமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சித் தலைமைத்துவத்தை சஜித்துக்கு விட்டுக்கொடுத்தால் மட்டுமே கட்சி பிளவுபடாமல் காப்பாற்ற முடியும். பிரதமர் தனது கனவான் அரசியல் மகத்துவத்தை இந்தத் தருணத்தில் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தேர்தல் தோல்விக்கு சஜித் பிரேமதாஸ மீது பழியைப்போட முடியாது. ஐக்கிய தேசிய கட்சி சரியான விதத்தில் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் மற்றொரு தேர்தலை எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடியாது என்பதை ஐ. தே. க. வில் உள்ள தலைவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், பிதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பினர் விட்டுக்கொடுக்கும் நிலையில் காணப்படவில்லை. தற்போதைய நிலையில் அரசாங்கத்தை விட்டுக்கொடுத்து எதிர்க் கட்சித் தரப்புக்குச் செல்வதே சிறந்தது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கின்றார்.

சஜித் பிரேமதாஸவுக்கு தலைமைத்துவத்தை கோருவது தொடர்பாக கேட்டபோது பதிலளித்த அமைச்சர் கிரியெல்ல,

தேர்தல் முடிவை ஆணைக்குழுத் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே சஜித் பிரேமதாஸ கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்துவிட்டார். இப்போது கட்சித் தலைமைத்துவத்தையும், எதிரணிக்குப் போனால் எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் கேட்பது கேலிக் கூத்தானதாகும். அதுவும் இக்கோரிக்கையை அவர் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் முன்வைக்கவில்லை.

அதுமட்டுமல்ல குழுக்கூட்டத்துக்கு அவரோ, கட்சிகளின் தலைவர்களோ சமுகம் தரவில்லை எனவும் அமைச்சர் கிரியெல்ல குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இன்றைய சந்திப்புக்களும், கூட்டங்களும் முக்கியத்துவம் மிக்கதாகவே நோக்கமுடிகிறது. அரசாங்கத்தின் இருப்பும், ஐக்கிய தேசியக் கட்சியின் இருப்பும் இன்று எட்டப்படக்கூடிய தீர்மானங்களிலேயே தங்கியுள்ளன.

 எம். ஏ. எம். நிலாம்

No comments

Powered by Blogger.