Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக முற்றலில் இடம்பெற்ற போராட்டம்

14 வது நாட்களையும் தாண்டி அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும், ஊழியர்களுக்கு அரசு ஏற்கனவே வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றித் தருமாறு கோரியும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருவதன் காரணமாக, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் பல்கலைக்கழகங்களுக்குப் பொறுப்பான உயர்கல்வி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர் உடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது மேற்படி விடயங்களை தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக முற்றலில் இடம்பெற்ற போராட்ட அணிவகுப்பைத் தொடர்ந்து மேலும் கருத்துத் தெரிவித்தபோது: தாங்கள் மேற்கொள்ளும் போராட்டமானது மிகவும் நியாயமானது என்றும் ஊழியர்கள் விடயத்தில் அரசு பாரபட்ஷம் காட்டக்கூடாது என்றும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால் மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதை தாங்கள் உணர்ந்து கவலையடைவதாகவும், ஊழியர்களின் நியாயமான போராட்ட விடயத்தில் மாணவர்களும் கருசணை செலுத்தி அரசுக்கு அழுத்தங்களை செலுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிப் பகிஷ்கரிப்பின் 14 ஆவது நாளான இன்று (திங்கட்கிழமை) அடையாள போராட்டமாக இந்த போராட்டம் முன்டெடுக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்த ஊதிய உயர்வை பெற்றுத்தர தயங்குவதாகவும் 2500 ரூபாய் சம்பள உயர்வானது ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட போதும் கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் எனவும் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் குறித்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரவூப் ஹக்கீம் வாய்திறக்காமல் இருப்பது கவலையளிப்பதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வேட்பாளரை தேட முன்னர் எமது பிரச்சினைக்கு தீர்வைதர முன்வரவேண்டும். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த விடயத்தில் உடனடியாக கரிசனை செலுத்தி தீர்வை பெற்றுத்தர முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்துடன் பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.வை.அமீர், நூருல் ஹுதா உமர்-

No comments

Powered by Blogger.