Header Ads



கோத்தபாய வென்றால், இப்படியெல்லாம் செய்வார் - மகிந்த

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஆட்சிக்குவந்தால் புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சண்டே டைம்ஸிற்கு வழங்கிய சிறிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறான புதிய அரசமைப்பின் உள்ளடக்கங்கள் குறித்து எதிர்காலத்திலேயே தீர்மானிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் மாகாணசபைகளின் செயற்பாடுகள்  உட்பட  அதிகளவு அதிகார பகிர்வு குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 19 வது திருத்தத்தை நீக்கவேண்டும்,அது பிழையானது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் பாராளுமன்றத்தினை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் தேசிய பாதுகாப்பு மற்றும் துரிதமாக வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் குறித்து அதிக கவனத்தை செலுத்துவோம் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் இன்று உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் வாழ்கின்றனர்,பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் கைதுசெய்யப்படுவதாக  நாளாந்தம் செய்திகள் வெளியாகின்றன என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச மிகவும் திறமையான வேட்பாளர் அவர் தேசிய பாதுகாப்பினை மாத்திரமல்ல சட்டமொழுங்கையும் உறுதி செய்வார் அவர் ஏற்கனவே தனது ஆளுமையை நிருபித்துள்ளார் என மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டுவிட்டார் என என்னால் நிச்சயமாக தெரிவிக்க முடியும்,அவர் பிரஜாவுரிமையை கைவிடவில்லை என சிலர் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கட்டும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.