புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி முஸ்லிம் வீட்டை, சோதனையிட வந்தவர்களால் பணம் நகைகள் கொள்ளை
தம்மைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறியவர்களால் அக்கரைப்பற்று பதுர் பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (09) மாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 26 பவுண் நகைகள், 4 ,80, 000 ரூபா பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்று முன்தினம் 4 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் இடம் பெற்றள்ளது.
சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் 3 பெண்கள் இருந்துள்ளனர். இதன்போது வேன் ஒன்றில் வந்த மூவர், தங்களைப் பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என அடையாளப்படுத்தி வீட்டைச் சோதனையிட வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வீட்டைச் சோதனை செய்யப் போவதாகவும் வீட்டில் உள்ள நகைகள் பணம் என்பவற்றை எடுத்து வேறாக ஓர் அறையில் வைக்குமாறும் அவர்கள் கூறியள்ளனர்.
அவர்கள் கூறியவாறே வீட்டிலிருந்தவர்களும் செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த நகைகள், பணம் ஆகியன பயங்கரவாதி ஸஹ்ரானுக்கு உரியவை என தெரிவித்து, அவற்றை வீட்டின் அறை ஒன்றில் வைத்து பூட்டி திறப்பை மண்டபத்துக்குள் வைத்துள்ளனர்.
இதனையடுத்து வீட்டிலிருந்த மூன்று பெண்களையும் கொள்ளையர்களில் ஒருவர், மற்றைய அறைக்குகள் அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளார். அப்போது மற்றைய இருவரும் கதவைத் திறந்து பணம், நகைகளை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஏனைய பெண்களுக்கும் தெரியாதிருந்துள்ளது. அப்போது வீட்டு மண்டபத்துக்குள் கண்காணிப்புக் கமெராகக்ளும் செயற்பட்டுக் கொண்டிருந்துள்ளன.
பின்னர் கொள்ளையர்கள் குறித்த நகைகளைச் சூட்சுமமாக எடுத்துக் கொண்டு செல்லும்போது ‘நாங்கள் உங்களை பரிசோதனை செய்வதற்குப் பெண் பொலிஸாருடன் வருகிறோம்’ அதுவரையும் பணம்.நகைகள் இருக்கும் அறையின் கதவைத் திறக்க வேண்டாம் என கூறிவிட்டு வேனில் தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து வீட்டிலிருந்த பெண்கள் சந்தேகம் கொண்டு அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அங்கு சென்ற பொலிஸார் குறித்த அறையின் கதவை திறந்து பார்த்த போது நகைகள்,பணம் கொள்ளையிடப்பட்டிருந்ததை அறிந்து கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment