Header Ads



கிறிஸ்ட்சேர்ச் - மாரச் 2019


ஈஸாவின் மீது
சாந்தி உண்டாகட்டும்
அவர் விதைத்ததெல்லாம்
அன்பு மட்டுமே
அன்பை மட்டுமே அவர் விதைத்தார்
அவரை மறுதலித்தவர்களும்
அவரைப் புறக்கணித்தவர்களும்
அவரைப் பிழையாகப் புரிந்து கொண்டவர்களும்
ஆயுதங்களிடம்
தம் ஆத்மாவை அடைமானம் வைத்தனர்
ஆயுதங்களைச் செய்தனர்
ஆயுதங்களை விற்றனர்
ஆயுதங்கள் கொண்டே
அனைத்தையும் செய்தனர்
அடுத்தவன் பொருளை
அடுத்தவன் நிலத்தை
அடுத்தவன் உயிரை
அடுத்தவன் கெளரவத்தையும்கூட
அபகரித்தெடுத்தனர்
அநியாயங்களை நியாயமாக்கியபடி
அநியாயத்துக்குட்பட்டவர்களைப்
பயங்கரவாதிகள் என்று
பறை சாற்றினர்
யுத்தங்களின் பெயரால்
ஆயிரம் முறை ஈஸாவைக் கொன்றவர்கள்
இன்று
ஈஸாவின் பெயராலான பிரதேசத்தில்
அவரை மற்றொரு முறை
படுகொலை புரிந்தனர்
பின்னர்
பள்ளிவாசலுக்குள் புகுந்து
நாற்பத்தொன்பது பயங்கரவாதிகளைச் 
சுட்டுக் கொன்றனர்
ஆம் –
உலகம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்க
குழந்தை, பெண்கள் அடங்கலான
நாற்பத்தொன்பது பயங்கரவாதிகளைச்
சுட்டுக் கொன்றனர்!

15.03.2019

Ashroff Shihabdeen

No comments

Powered by Blogger.