நாம், ஆட்சியில் இருந்திருந்தால்...?
அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கையில் பொது உடன்பாடு எட்டப்படாவிடின் மீண்டும் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் அதனை விவாதிக்க முடியும். இறுதியில் பொது உடன்படிக்கையின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பில் சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட ஆட்சியாளர்களின் அசமந்தப்போக்கே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தினார். புதிய அரசியல் அமைப்பு குறித்த நகர்வுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ஒவ்வொரு அரசியல் தலைவரும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்தே ஆட்சிக்கு வந்தனர். 1988 ஆம் ஆண்டிலும் 1994 ஆம் ஆண்டிலும், 2000 ஆம் ஆண்டிலும், 2005 ஆம் ஆண்டிலும் மீண்டும் 2015 ஆம் ஆண்டிலும் மக்கள் மத்தியில் வாக்குறுதி வழங்கினர். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக முழுப் பாராளுமன்றத்தையும் அரசியல் அமைப்பு சபையாக மாற்றியமைப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. இன்று அதுவே இடம்பெற்று வருகின்றது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது மக்கள் வாக்கெடுப்பு இல்லாது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க மக்கள் வாக்கெடுப்பு அவசியம். அவ்வாறென்றால் புதிய அரசியல் அமைப்பாகவே அது அமைய வேண்டும். இவர்கள் மறைமுகமாக கூறினாலும் இதனை புதிய அரசியல் அமைப்புக்கான வாக்குறுதியாகவே கருத வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணி அரசியல் செய்து வருகின்றது. 1978 ஆம் ஆண்டில் இருந்தே எமது நிலைப்பாடு இதுவாகவே அமைந்தது. 2015 இல் ஆட்சி மாற்றத்தின் போதும் நாம் புதிய அரசியல் அமைப்பு என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டு வந்தோம். ஆகவே எவ்வாறேனும் புதிய அரசியல் அமைப்பு சரியான முறையில் அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
தமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்தை இந்த அரசியல் அமைப்பின் மூலமாக நிறைவுக்கு கொண்டுவர முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகின்றது.
இதன்மூலம் தமது கட்சியை பலப்படுத்தவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையை உருவாக்கவும் ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கலாம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தக்கவைத்து ஆட்சியை கொண்டுசெல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கருத முடியும். எனினும் தீர்வு ஒன்று அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து நாம் செயற்பட்டு வருகின்றோம்.
அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழு சட்டவிரோதமானது என்று விஜயதாஸ
ராஜபக் ஷ கூறுகின்ற போதிலும் ஆரம்பத்தில் இருந்தே அவர் வழிநடத்தல் குழுவில் செயற்பட்டார். கடந்த ஒன்பது மாதங்களாக நாம் இந்த நகர்வுகளை முன்னெடுத்தோம். 75 தடவைகள் கூடி இடைக்கால அறிக்கை தொடர்பில் ஒவ்வொரு வாக்கியமாக விவாதித்து இறுதி முடிவுக்கு வந்தோம். இப்போது விவாதிக்கப்பட்டிருப்பது பொதுவான அறிக்கையாகும். இதில் முரண்பாடுகளும் அனைவரும் ஏற்றுகொள்ளும் நிலைப்பாடுகளும் உள்ளன. இந்த அறிக்கைகளில் பொது உடன்பாடு எட்டாவிடின் மீண்டும் பெப்ரவரி மாதம் விவாதிக்கப்படும். அதன் போதும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். அதில் அனுமதி கிடைத்தால் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்படும். அதன் பின்னர் மீண்டும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வெற்றிபெற வேண்டும். அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்.
நாம் ஆட்சியில் இருந்திருந்தால் இதனை விட சரியான அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டு இப்போதைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கும். இவர்களால் முடியாததை நாம் செய்து காட்டியிருப்போம். எனினும் இப்போதும் சரியான அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்தை கருத்தில் கொண்டே போராடி வருகின்றோம். அதேபோன்று சர்வதேச தேவைகள் தொடர்பில் நாம் புதிதாக கூற ஒன்றும் இல்லை. இது எல்லா காலகட்டத்திலும் காணப்பட்ட ஒன்றாகும். யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத காரணத்தினால் தான் சர்வதேசம் எம்மை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. முதலில் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் தவறை செய்துகொண்டு சர்வதேசத்தை விமர்சிக்க இயலாது என்றார்.
Post a Comment