இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான, வன்முறைகளின் பின்னணியில் சர்வதேச சக்திகள்
“சாட்சியமாகும் உயிர்கள்” – எனும் இந்த புத்தகத்தை வாசிப்பது என்பது மிகவும் இலகுவான காரியமல்ல. இரத்தத்தினதும் சதையினதும் வாடை இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் வீசுகிறது. 1990 களில் தாயின் கருவறைக்குள் இருந்து வளர்கின்ற குழந்தை முதல், தொண்ணூறு வயது முதிர்ந்தவர் வரை கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏன் கொலை செய்யப்படுகிறோம் என்ற காரணம் தெரியாமலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த அநியாயத்தினதும், அக்கிரமத்தினதும், கொடூரத்தினதும் சாட்சியங்களை பதிவு செய்து வைத்திருக்கின்ற ஒரு நூல்.
உலகத்திலே மிகவும் வளமிக்க ஒரு தேசத்தில் இறைவன் நம்மைப் பிறக்க வைத்திருக்கிறான். இலங்கைத் தீவு அற்புதமான வளங்களைக் கொண்ட ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலப்பரப்பு. ஆனால் இந்த நாட்டினுடைய வளங்களை பயன்படுத்தி, ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாக, இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு வாழ்கின்ற சூழ்நிலையிலிருந்து எங்களைத் திசை திருப்பி சர்வதேச சக்திகள் தங்கள் நலன்களை அடைந்துகொள்வதற்கு திட்டங்களைத் தீட்டி வந்துள்ளன. இந்த நாட்டை எப்பொழுதுமே மோதல் கொண்ட ஒரு கொதி நிலையில் உள்ள நாடாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் குறியாகவே அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழர்களும் முஸ்லிம்களும் வடக்கிலும், கிழக்கிலும் ஒருபோதும் இணைந்துவிடக் கூடாது என்பதில் அந்த சர்வதேச சக்திகள் மிகக் குறியாக செயற்பட்டு வந்திருக்கின்றன. அதற்கான பல அத்தாட்சிகளையும், சான்றுகளையும் சர்ஜூன் ஜமால்தீன் இந்த புத்தகத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
1970களில் இந்த நாட்டிலே தமிழ் சமூகத்தின் மீது சிங்கள சமூகமும், சிங்கள இனவாத அரசியல் சக்திகளும் மிகக் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன. இதனால் தமிழ் இளைஞர்கள் தங்களது அரசியல் தலைமைத்துவங்களின் சாத்வீக வழிமுறைகளின் மீது நம்பிக்கை இழந்து ஆயுதப் போராட்ட வழிமுறை மாத்திரம்தான் தீர்வு என்று கருதி ஆயுதத்திற்குள் செல்கிறார்கள்.
இப்படியான ஒரு சூழலிலே, கிழக்கில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் தமிழர்களுடனான இணக்கப்பாட்டு அரசியலை எப்படிச் செய்ய முடியும் என்று சிந்திக்கிறார்கள். அவர்களும், “தமிழ் பேசும் மக்கள்” என்ற கோஷத்துக்குள் வருகிறார்கள். தலைவர் அஷ்ரப் அவர்களும், தந்தை செல்வாவோடு இணைந்து ஒரு இணக்கப்பாடான அரசியலை செய்ய முடியுமா என்று களத்தில் இறங்கிச் செயற்படுகின்றார். பல தேர்தல்களை எதிர்கொள்கிறார்கள்.
ஆனால், சர்வதேச அரசியல் சக்திகளிலும், சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலிலும் மிக கவனமாக இருந்தவர்கள், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் இணைவு என்பது இந்த நாட்டிலும், இந்தப் பிரதேசத்திலும் தங்களது நலன்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை அன்றே கணித்திருந்தார்கள். எனவேதான், தமிழ் ஆயுதக் குழுக்களை மிக கவனமாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புகின்ற அந்தப் பணியிலே அவர்கள் வெற்றி அடைந்தார்கள்.
இக் காலப்பகுதியில் அதாவது 90களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களின் சாட்சியமாகவே இந்த நூல் மாறியிருக்கிறது.
2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. அதற்குப் பின்னர் இந்த நாட்டிலே சமாதானமான சூழல் உருவாகும் என்று நம்பினோம். இருந்தாலும் 2010 ஆம் ஆண்டே சிங்களத் தீவிரவாத சக்திகள் மிகக் கடுமையாக முஸ்லிம்கள் மீது இனவாதத்தை கட்டவிழ்த்துவிடத் தொடங்கின. காலியில் பொதுபலசேனாவின் காரியாலயத்தை ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரி திறந்து வைத்தபோது, அடுத்த அலாரம் எங்களுக்கு அடித்தது.
இந்த நாட்டில் மீண்டும் ஒரு முரண்பாட்டை உருவாக்குவதற்காக சர்வதேச சக்திகள் களத்திலிறங்கிவிட்டன என்பதைத் தெளிவாகவே நாங்கள் கண்டோம். அந்த சாட்சியங்களும் பதிவு செய்யப்பட வேண்டிய சாட்சியங்களாகத்தான் மாறியிருக்கின்றன.
இறுதியாக, ஒழுங்கமைக்கப்பட்ட முஸ்லிம் ஆயுதக் குழுக்களை இலங்கையிலே உருவாக்க முடியாது தோற்றுப்போனபோதுதான், கடும்போக்கு மதத் தீவிரவாதம் கொண்ட சில இலங்கையர்களை அடையாளம் கண்டார்கள். அவர்களை மூளைச் சலவை செய்தார்கள். அவர்களுக்கு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதன்மூலம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடாத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இந்த நாட்டில் நடந்து முடிந்தபோதும், நாம் பட்ட அவலங்களை இங்கு நான் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. நாம் அத்தனை பேரும் அந்த அவலங்களை அனுபவித்திருக்கிறோம். பள்ளிவாசலுக்குள் தொழுவதற்குக்கூட பயந்து பயந்து தொழுகின்ற நிலையை இந்த நாட்டிலே வாழும் முஸ்லிம்கள் அனுபவித்திருக்கிறார்கள்.
அப்படியான ஒரு சூழலை இந்த சர்வதேச நிகழ்ச்சி நிரல் கொண்டு வந்து நிறுத்தியது. எனவேதான், நாம் இப்போது எங்கு இருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டிய ஒரு கடப்பாடு நமக்கு இருக்கிறது. நிகழ்வுகளை வெறும் நிகழ்வுகளாகவே பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கின்ற இந்த நிகழ்ச்சி நிரலிலிருந்து பாடம் படித்துக்கொண்டு, இந்த சர்வதேச நிகழ்ச்சி நிரலிலிருந்தும், இந்த சக்திகளுடைய சூழ்ச்சிகளிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு சமூகமாக மாறுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் என்ன வியூகத்தை வகுத்திருக்கின்றன என்பதே நம்முன் உள்ள ஒரு முக்கியமான கேள்வி.
இன்றும் செம்மணியிலே எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எதிர்வருகின்ற ஜூலை மாதம் பன்னிரண்டாம் திகதியோடு, குருக்கள் மட படுகொலை இடம்பெற்று 35 வருடங்கள் நிறைவாகின்றன. ஆனால் அதைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் எந்தத் திராணியும் கிடையாது. புனித ஹஜ் செய்து முடித்துவிட்டு வந்த ஹாஜிகள் கடத்தப்பட்டு, குருக்கள் மடத்திலே புதைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவைகளைத் தோண்டுவதற்கான எந்த முயற்சிகளும் இல்லை. அவைகளைப் பற்றிய சாட்சியங்களும் இந்த நூலில் விலாவாரியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம் இவ்வாறான நிகழ்வுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டு, முன்னோக்கிச் செல்வதற்கான என்ன வேலைத் திட்டங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம்?
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், இந்த நாட்டிலே நாங்கள் வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து பலர் இந்த நாட்டை விட்டு ஓடினார்கள். கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது, மிகவுமே ஒரு மன உளைச்சலுக்குள் முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டது. “இந்த நாட்டில் இனியும் வாழ முடியுமா?” என்ற ஒரு நிலைக்கு வந்தோம். ஆனால், இந்த நாட்டின் மீது பற்றுக்கொண்டு இந்த நாட்டு மக்கள் ஒரு எழுச்சியை செய்தார்கள் என்று சொல்வதில் எனக்கு இப்போதும் உடன்பாடில்லை. இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தங்களுடைய வயிற்றைப் பாதித்தபோதுதான் தங்களுடைய வயிற்றைப் பாதுகாப்பதற்காக அவர்கள் போராடினார்கள்.
ஒரு ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தை நோக்கி சிவில் சமூகங்களும், முஸ்லிம் சமூகத்தின் பொது மக்களும் அழுத்தம் கொடுக்காது விட்டால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலைவிட மிக மோசமான நிலைமைகளுக்குச் செல்ல வேண்டி வரும் என்ற சமிக்ஞைகள் மக்களுக்குத் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த சமிக்ஞைகள் இன்னும் இல்லாமல் போகவில்லை. தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு தற்காலிகமான ஓய்வுதான்.
இங்கு ஃபாதர் ரொஹான் இருக்கிறார். நானும் ஃபாதர் ரொஹானும் நீண்ட காலமாக பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத் தலைவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். ஒரு இரவு ஒரு பௌத்த சமயத் தலைவர் என்னை தொலைபேசியில் அழைத்து, “உங்களை நான் அவசரமாக சந்திக்க வேண்டும், கொழும்புக்கு வர முடியுமா?” என்று கேட்டார். ஒரு சில தினங்களில் அவரை கொழும்பிலே சந்தித்தேன். என்னை சந்திக்க வந்தபோது அவர் ஒரு குறிப்புப் புத்தகம் (நோட்புக்) கொண்டு வந்திருந்தார். அந்த நோட்புக்கை பார்த்து பார்த்து, அரபு வசனங்களைச் சொல்லிச் சொல்லி, “இதென்றால் என்ன? இதென்றால் என்ன? இப்படி என்றால் என்ன?” என்று என்னிடம் கேட்டார். ஒரு பௌத்த துறவி, அரபு வசனங்களை இவ்வளவு துல்லியமாக எப்படி கற்றுக்கொண்டார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். நான் அவரிடம் கேட்டபோது சொன்னார், “நீங்கள் என்னை இப்போதே கேட்கக்கூடாது. இவை அத்தனைக்கும் விளக்கம் சொல்லி முடிந்த பின்னர் நான் உங்களுக்கு அதனைப் பற்றிச் சொல்லுவேன்.” என்றார்.
நான் மிக பொறுமையாக எல்லாவற்றையும் அவருக்குச் சொல்லி, இறுதியாக ஒரு வார்த்தையை கேட்டார். அதுதான் “அல்-வலா வல்-பரா” என்றால் என்ன? என்பது. நான் அந்த வார்த்தையை அரபு மொழியில் அதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கவில்லை. நான் அரபு மொழியில் 7 வருடங்கள் கற்றவன். எனினும் எனக்கு அந்த சொல் பற்றிய, அந்த விடயம் பற்றிய தெளிவு அப்போதைக்கு இல்லை என்று அவரிடம் சொன்னேன். “உண்மையாக இது பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். நான் என்னைவிட இதிலே ஆழமான அறிவுள்ளவர்களிடம் கேட்டுவிட்டு, இதைச் சொல்கிறேன்” என்றேன். இதை நான் ஒரு சிரேஷ்ட இஸ்லாமிய அறிஞரிடம் போய்க் கேட்டேன். அவர் அதனை விளங்கப்படுத்துகின்றபோது என்னுடைய உடல் நடுங்கியது. இந்த துறவிக்கு இந்த விடயத்தைச் சொல்லிக் கொடுத்தது யார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். பின்னர் நான் அந்த இஸ்லாமிய அறிஞரையும் என்னிடம் கேள்வி கேட்ட பௌத்த மத குருவையும் நேரில் சந்திக்க வைத்தேன்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். மிகவும் கவனமாக திட்டமிட்டு, மிக முக்கியமான பல விடயங்கள் பற்றி பௌத்த மத குருக்களுக்கு தவறான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரபு மதரசாக்களில், அரபுக் கல்லூரிகளில், இஸ்லாமிய கல்வி நிலையங்களில், பள்ளிவாசல்களில் இதனைத்தான் போதிக்கிறார்கள் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. “அல்-வலா வல்-பரா” என்றால், முஸ்லிம்கள் மீது இரக்கம் காட்டுவதும், காபிர்கள் மீது கடுமையாக நடந்துகொள்வதும் என்ற ஒரு கோட்பாடு. இது ஒரு பெரிய கோட்பாடு, இது ஒரு பெரிய சிந்தனை. இது அல் கைதாவுடைய தலைவர்கள் பேசிய மிக முக்கியமான ஒரு கோட்பாடு. அது இங்குள்ள பிற தலைவர்களுக்கு படிப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனை வைத்துக் கொண்டு அவர்கள் எங்களை தவறாகப் பார்க்கிறார்கள், எம்மை பயத்தோடு பார்க்கிறார்கள், ‘இலங்கை முஸ்லிம்கள் இந்த விடயங்களையெல்லாம் மத்ரசாக்களில் கற்பிக்கிறார்கள்’ என்ற ஒரு கற்பிதத்தோடு அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
இப்போது இவர்களுக்கு உண்மையைச் சொல்லிக்கொடுப்பது யார்? சந்தேகங்களைத் தீர்த்து வைப்பது யார்? இதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பு யார் மீது இருக்கிறது? அதனைச் செய்யாவிட்டால், சர்ஜூனைப் போன்ற ஒரு தம்பி, இன்னும் ஒரு 30 வருடத்துக்குப் பின்னர் வந்து, “சாட்சியாகிப் போன உயிர்களின்” இரண்டாவது பாகத்தை நமது கைகளில் தந்து, இப்படி ஒரு கூட்டத்தை நடத்தி இங்கு நானும் நீங்களும் பேசக் கேட்டுவிட்டு இன்னும் ஒரு அவலத்துக்கு இடமளிக்கப் போகிறோமா? இல்லை, இந்த சாட்சியங்களிலிருந்து பாடம் படித்துக்கொண்டு, எதிர்கால சந்ததிக்கு அமைதியும், சகிப்புத்தன்மையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, “உங்களுடைய மதம் உங்களுக்குரியது, எங்களுடைய மதம் எங்களுக்குரியது. ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, மதிப்பளித்து, இரக்கம் காட்டி வாழ்வோம்” என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கப் போகிறோமா? இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கின்றபோது எனக்குள் எழுந்தி கேள்வி இது. இது முதலாவது விடயம்.
இரண்டாவது விடயம், இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு சகோதரர் சர்ஜூன் சுமார் ஆறு வருடங்கள் தன்னுடைய காலத்தை, நேரத்தை செலவழித்திருக்கிறார். இது ஒரு சாதாரண விடயம் அல்ல. இந்தப் புத்தகத்திலே சுமார் முப்பது பேரை அவர் நேர்காணல் கண்டிருக்கிறார். சம்பந்தன் ஐயா முதல், எரிக் சொல்ஹெய்ம் வரை அவர் இந்தப் புத்தகத்திலே பல அரசியல் தலைவர்களை நேர்காணல் செய்திருக்கிறார். இந்த நாட்டிலே பெயர் குறித்தும், பெயர் குறிக்கப்படாமலும், அடையாளப்படுத்தியும், அடையாளப்படுத்தாமலும் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான அத்தனை படுகொலைகளையும் இந்தப் புத்தகத்திலே அவர் பதிவு செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட பலருடைய சாட்சியங்கள், அவர்களுடைய வரலாறுகள் இதிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு சகோதரருடைய ரத்தமும், சதையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க இரத்த வாடை வீசுகின்ற ஒரு வரலாற்றின் சாட்சியம்.
ஆனால் இது இன்னும் சர்வதேச சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி நமக்கும் இருக்கிறது. தமிழ் மக்கள் இன்று தமிழ் ஈழத்தில் நடந்த அத்தனை படுகொலைகளையும், இணையதளம் வழியாக ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு பேப்பர் துண்டிலாவது முஸ்லிம் சமூகத்தின் இழந்த நிலப்பரப்புகள் பற்றியோ எங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களைப் பற்றியோ எந்தவித ஆவணங்களும் நம்மிடம் இல்லை. ஆகக் குறைந்தது இவ்வாறு தொகுக்கப்பட்ட ஆவணங்களையாவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புவாய்ந்தவர்கள் சர்வதேசமயப்படுத்தவும் ஆங்கில மொழியில் இணையத்தளங்கள் வாயிலாக உலகறியச் செய்யவும் முன்வர வேண்டும்.
- Vidivelli -
Post a Comment