இவை தோண்டி மூடப்பட்ட, வெறும் குழிகள் அல்ல...
பார்க்க மிகவும் அமைதியாகத்தான் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கப்ருக்குள்ளும் என்ன நடக்கின்றது, இதில் அடக்கம் செய்யப்பட்டோரின் நிலை என்ன? என்பது இறைவனுக்கே மட்டுமே தெரிந்த உண்மை. இங்கு நாமும் ஒருநாள் கொண்டுவரப்படுவோம்...
விசாரணை, குற்றவாளிகளுக்கான தண்டனை.கப்ரின் நெருக்கம் என பாரதூரமான விடயங்கள் இங்கு நடக்கும்...
அதனால்தான் நபியவர்கள் ஒவ்வொரு தொழுகையிலும் கப்ர் வேதனையில் இருந்து பாதுகாவல் தேடியுள்ளார்கள்.
இந்த கப்ருகள்தான் உங்களது உலக பயணத்தின் முடிவும் மறுமைக்கான ஆரம்பமும்.
உங்களது நீண்ட பயணம் சாதாரண இந்திரியத் துளியில் ஆரம்பித்து உங்களது தாயின் கருவறைக்கு...
தாயின் கருவறையில் இருந்து மண்ணுக்கு...
மண்ணில் இருந்து மண்ணுக்குக் கீழ்...மண்ணுக்குக் கீழிருந்து மறுமை நோக்கி...
ஒவ்வொரு இடத்திலும் பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் காண்பீர்கள்...
இறுதியில் சுவர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்கு. மூன்றாம் இடமொன்று இல்லை.
இதுதான் உங்களது பயணம்.
வாழ்க்கை முழுவதும் இந்த உலகத்திற்காக நீங்கள் போராடுகின்றீர்கள். ஆனால் இந்த உலகமோ இறுதியில் உங்களுக்குத் தருவது என்னமோ உங்களை நல்லடக்கம் செய்வதற்கான இந்த ஆறடிக் குழிகளை மட்டும்தான்.
ஆனால் நாம் உணர்வு பெறவில்லை. கப்ருடைய வாழ்வின் விபரீதத்தை புரிந்து கொள்ளவில்லை.
எதுவரை இந்த அலட்சியம்? இந்த கப்ருக்குள் செல்லும் வரைதானே.
உலக விடயங்களில் எவ்வளவு நேர்த்தியாக, துல்லியமான நேரத்தில் செயற்படுகின்றோம்.
ஆனால் மார்க்க விடயங்களில் பாராமுகமாக உள்ளோம். தொழுகை விடயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர்
[எனினும், நீங்கள் (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்].
(அல்குர்ஆன் : 87:16)
உங்கள் மீதான் கடமைகளை நிறைவேற்றுங்கள். அத்தனை குற்றங்கள், பாவங்களில் இருந்து விடுபட்டு உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
வல்ல இறைவனே போதுமானவன்.
- பாஹிர் சுபைர் -
Post a Comment