Header Ads



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால், பலகோடி பேரின் வேலைக்கு ஆப்பு


இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

எனினும், இந்த தொழில்நுட்பம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர், மனிதர்கள் தற்போது பார்த்து வரும் பல்வேறு பணிகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.


செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஓர் மனிதனை போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் அனுமதிக்கிறது.


மனிதனை போலவே ஓர் விஷயத்தை கணிப்பது மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, இவை தொடர்பான அதிக அளவிலான தகவல்களை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கலாம்.


கணினியை கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algoritms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது.


அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது. இதனை கொண்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம்.


அத்துடன் பயனாளர்களுக்கு எந்த பதிவைகளை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இத்தொழில்நுட்பம் உதவலாம்.


வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய அமேசான் நிறுவனத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. அத்துடன் போலி மதிப்பீடுகளை களையவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.


ChatGPT மற்றும் snapchat’s My AI என்றால் என்ன?

ChatGPT மற்றும் snapchat’s My AI இரண்டும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சக்தி வாய்ந்த பயன்பாடுகள் அல்லது செயலிகளாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு செயலிகளும் சமீபகாலமாக மிகுந்த கவனம் பெற்று வருகின்றன.


ChatGPT மற்றும் snapchat’s My AI ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைக்கு சிறந்த உதாரணங்களாக கூறப்படுகின்றன.


அத்துடன் செயற்கை நுண்ணறிவானது, ‘சாட்பாட்’ எனப்படும் கணினி மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது எழுத்து வடிவ உரையாடல் வழியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறது.


கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கதைகள் சொல்லவும், கணினி மென்பொருளை எழுதவும் இந்த செயலிகளை பயன்படுத்தலாம். ஆனால் இவ்விரண்டு செயல்களின் பயன்பாடும் பயனர்களுக்கு சில நேரங்களில் தவறான முடிவுகளை அளிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சம் ஏன்?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நிர்வகிக்க சில விதிகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால், இத் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்துகின்றனர்.


‘ஏஐ’ தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக கருதப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்தில் தான் பார்த்து வந்த வேலையில் இருந்து கடந்த மாதம் விலகினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விரைவில் மனிதனை விட புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.


ஹிண்டனின் பணி விலகலை தொடர்ந்து, அமெரிக்காவில் செயல்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து வரும் மையம் கடந்த மாதம் ஓர் முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. 25க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆதரவுடன் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை ‘ஏஐ’ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.


சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கில் தவறான தகவல்களை உருவாக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அத்துடன், இத்தொழில்நுட்பத்தால் மனிதர்களை விட இயந்திரங்கள் புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்றும், அத்தகையதொரு மோசமான நிலை மனித குலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ள கடுமையான சட்டங்கள் தேவை என்று வலியுறுத்துகிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்ப தலைவரான மார்கிரேட் வெஸ்டேஜர்.


ஒரு சார்பு நிலை மற்றும் பாகுபாட்டைப் பெருக்கும் ‘ஏஐ’ இன் தொழில்நுட்பத் திறன் மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது என்று பிபிசியிடம் கூறினார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்ப தலைவரான மார்கிரேட் வெஸ்டேஜர்.


குறிப்பாக, கடன் விண்ணப்பங்கள் மீது முடிவெடுப்பது போன்ற விஷயங்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் அது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் பாதிக்கும் என்று வெஸ்டேஜர் கவலை தெரிவித்தார். அத்துடன் தேர்தல் போன்ற முக்கியமான விஷயங்களில் இத்தொழில்நுட்பம் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.


ஆனால், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை நாம் வெறித்தனமாக எதிர்க்க வேண்டியதில்லை என்று கூறும் மார்தா லேன் ஃபாக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், அதன் திறன்கள் குறித்த நுட்பமான உரையாடல்கள் அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


‘ஏஐ’ தொடர்பாக தற்போதுள்ள விதிமுறைகள் என்ன?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல்பாட்டை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக உலக நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு நிலவி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ள ‘ஏஐ’ சட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் தொடர்பாக கடுமையான பல்வேறு விதிமுறைகளை கொண்டுள்ள இந்த சட்டத்தை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டி வரும்.


2025 இல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு, குறைவான பாதிப்பு ஏற்படும் நிலைகள் உள்ளிட்டவை குறித்து இந்தச் சட்டத்தில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


ஆனால், இந்தச் சட்டம் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு பொருந்தாது என அந்த நாட்டு அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. அத்துடன் ‘ஏஐ' தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்த தனது பார்வையை கடந்த மார்ச் மாதம் பிரிட்டன் தெளிவுபடுத்தி உள்ளது.


இத்தொழில்நுட்பம் தொடர்பாக தற்போதுள்ள விதிமுறைகள் குறித்து அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போதெல்லாம், அதனை பயன்படுத்தும் நிறுவனங்கள் குறித்து பயனாளர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தை சீனா தெரிவித்துள்ளது.


ஆனால், ஏஐ தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் உலகளாவிய விவகாரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் வெஸ்டேஜர், குறைந்த பட்சம், இந்த விஷயத்தில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுக்கு இடையே யாவது ஒருமித்த கருத்து உருவாக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.


எந்தெந்த வேலைகளுக்கு ஆபத்து?

ஏஐ தொழில்நுட்பம் உலகளாவிய பணி சூழலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில். இதனால் எந்தெந்த வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் கலந்த கேள்வியும் எழுந்துள்ளது.


உலகம் முழுவதும் 300 மில்லியன் நபர்கள் தற்போது முழுநேரமாக செய்துவரும் பணிகளை ‘ஏஐ’ தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றி அமைக்கும் எனவும், இந்தப் பணிகள் அனைத்தும் இயந்திரமயம் ஆக்கப்படும் என்றும் முதலீட்டு வங்கியான Goldman Sachs அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது அனைத்து விதமான பணிகளை மேற்கொண்டு வரும் மனிதர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்காகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நிர்வாகம் சட்டம், கட்டடக் கலை உள்ளிட்ட துறைகள் சார்ந்த பணிகளுக்கு, 'ஏஐ’ தொழில்நுட்பத்தால் பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேசமயம் மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளில் ஏற்கனவே ‘ஏஐ’ தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. மார்பக புற்று நோயை அடையாளம் காண தங்களுக்கு உதவும் வகையில் மருத்துவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.


நுண்ணுயிர்கள் எதிர்ப்புக்கான புதிய மருந்துகளை (ஆன்டிபயாடிக்) கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பணிகளில் விஞ்ஞானிகள் இத்தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் அதிகரிக்க ‘ஏஐ’ தொழில்நுட்பம் வழிவகுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. BBC

No comments

Powered by Blogger.