Header Ads



மூத்த அமைச்சர் ஒருவரின், விசித்திரமான பிரார்த்தனை


2024ம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிட வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்வதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மைத்திரிபால சிறிசேன தனித்து போட்டியிடுவது சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு சாதகமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

“பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வருவதற்கு சுதந்திர கட்சி முழுமையாக ஆதரவு வழங்கியது.

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கறிவேப்பிலையை ஒதுக்குவதை போன்று பொதுஜன பெரமுன சுதந்திர கட்சியை ஒதுக்கி விட்டது என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்ததால் சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு தெரிவானார்களா அல்லது சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்ததனால் தான் தேர்தலில் வெற்றியடைய முடிந்ததா என்பதை சுதந்திர கட்சியினர் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

2024ம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறோம். சிறிலங்கா பொதுஜன பெரமுன எக்காரணிகளுக்காகவும் பிளவடையாது.

பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணியடிப்படையில் இணைந்துள்ள பங்காளிக்கட்சிகள் சில வேளை தேர்தல் காலத்தில் தனித்து தீர்மானங்களை முன்னெடுக்கலாம்.

ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்மானங்களை முன்னெடுக்கும் உரிமை அனைத்து தரப்பினருக்கும் உண்டு” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.