இவர் போன்ற பெண்களுக்கு உதவுங்கள் - பிரதேச அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா..?
- குகதர்சன் -
நாட்டின் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் அன்றாட ஜீவனோபாயத்தை மாத்திரம் நம்பி வாழும் பல்வேறு குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்த நிலையில்பெரும் அவலத்தில் சிக்குண்டுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அன்றாட தொழிலாளர்கள் முதல் அரச உத்தியோகத்தர்கள் சகிதம் தங்களது வாழ்க்கையை நடாத்த முடியாத சூழ்நிலை .காணப்படுகின்றது
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு-கைப்பணிபொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்த பெண்ணின் அவலம்
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் ஹ{ஸைனியா வீதியில் வசிக்கும் அமீர்அலி சித்தி சுகைரா (வயது 46) என்பவர் தனது வாழ்வாதாரத்தினை கொண்டு செல்லும் வகையில் கைப்பணிப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருபவர்
இவரது கைப்பணி வியாபாரம் அனைத்தும் தடைப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ள நிலையில் தனது கணவரின் வருமானம் போதாமை காரணமாக சுமார் பத்து வருடங்களாக களிமண் மூலம் உற்பத்தி பொருட்களும் மூன்று வருடங்களாக சிரட்டை மூலம் பொருட்களையும் நூல் மூலம் தொட்டில் போன்ற உற்பத்திகளை செய்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விற்பனை செய்து வருகின்றார்.
நாட்டின் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுவதாக ஓட்டமாவடியைச் சேர்ந்த அமீர்அலி சித்தி சுகைரா கவலை தெரிவித்துள்ளார்.
என்னால் களிமண் மற்றும் சிரட்டை மூலம் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்களையும் நூல் மூலம் தொட்டிலினையும் தற்காலத்தில் விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. அத்தோடு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக உபகரணம் இன்மையால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றேன்.
எனவே எனது கைப்பணியை திறம்பட மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி உற்பத்தி செய்வதற்காக உபகரணங்களை வழங்கி எனது உற்பத்தியை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்வதுடன் என்னால் சுயதொழில் தொழில் செய்ய ஆர்வமாக உள்ள பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கவும் முடியும் என்று தெரிவிக்கின்றார்.
இதற்கு எமது பிரதேச அரச அதிகாரிகள் அக்கறை செலுத்தி கைப்பணி உற்பத்தியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க முன்வருமாறும் எனது கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏற்ற வசதிகளை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment