இஷாலினியின் தாயார் றிசாத் வீட்டிலிருந்து நிறையை உதவிகளை பெற்றுள்ளார் - சூழ்ச்சியின் முடிச்சுகளை அவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
(ஆர்.யசி)
சிறுமி இஷாலினியின் மரணம் எமக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை நாமும் வலியுறுத்தியுள்ளோம். அதேபோல் பாதிக்ககப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். இந்த மரணத்தின் உண்மைகள் தெரிய வரும் வரையில் சகலரும் பொறுமையாக இருக்க வேண்டும் என தாழ்மையாக கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமீர் அலி தெரிவித்துள்ளார். இஷாலினியின் தாயாருக்கு உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது, எனவே அவரது தாயாரே இந்த சூழ்ச்சியின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டிலே உயிரிழந்த நுவரெலியா டயகமவை சேர்ந்த இஷாலினியின் மரணம் பாரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ள நிலையில் ரிஷாத் தரப்பில் இருந்து எந்தவித தெளிவுபடுத்தல்களும் இதவரை முன்வைக்கப்படாதுள்ள நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி இது குறித்த தமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டிலே உயிரிழந்துள்ள சிறுமி இஷாலினி 2020ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 18 ஆம் திகதி ரிஷாத் வீட்டில் பணியில் அமர்த்தப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் அங்கு பணியாற்றியுள்ளார். இப்போது இந்த மரணம் வெறுமனே ரிஷாத் பதியுதீனுக்கு மட்டுமல்ல கட்சி உறுப்பினர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும். இதில் பல்வேறு தரப்புகள் விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றன. அதேபோல் ரிஷாத் பதியுதீன் வீட்டில் உள்ள சகலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். சிறுமியின் மரணம் எமக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை நாமும் வலியுறுத்தியுள்ளோம்.
அதேபோல் அந்த வீட்டில் இருக்கும் அவரது மனைவி, அவருடைய தாய், தந்தையர் மற்றும் சிலரது கூற்றின் படி, சிறுமி இஷாலினிக்கு வழங்கப்பட்டுள்ள அறையிலே அவர் இரவு நித்திரைக்கு சென்றதாகவும், அதிகாலையில் கூக்குரல் சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்று பார்த்த வேளையில் சிறுமி உடலிலே தீ பற்றிக்கொண்டிருந்ததாகவும் உடனடியாக சிறுமியை காப்பாற்ற, வீட்டின் பின்னாலுள்ள நீர் தாங்கியில் அந்த சிறுமியை அமிழ்த்தியதாகவும் அதற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளனர். அதேபோல் அந்த சிறுமியும் ஒரு சில சந்தர்ப்பங்களில் பேசியுள்ளதாக கூறப்படுகின்றது. தனக்கு குளிர்ந்த நீர் வேண்டுமென சிறுமி கேட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் ஏன் தீ வைத்துக்கொண்டாய் என கேட்டபோதும் அதற்கு எந்தவித பதிலையும் சிறுமி கூறவில்லை என்பதே சகலருக்கும் மர்மமாக உள்ள விடயமாகும். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுயநினைவு இழந்து அவர் காலமாகியுள்ளார்.
இந்த விடயத்தில் அந்த சிறுமிக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எம்மத்தியில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் இந்த விடயத்தில் சில ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்தியுள்ளனர். சிறுமியாக அவரை காண்பிக்கப் பார்க்கின்றனர். ஆனால் அவர் 16 வயதிற்கு பின்னரே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தை பேசுவது தவறில்லை. அந்த மக்களின் பிரதிநிதிகள் நிச்சயமாக தமது மக்களுக்காக பேசவேண்டும், அதேபோல் இந்த விடயத்தில் உண்மை கண்டறியப்பட சகலரதும் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். வெறுமனே போராட்டங்களை செய்வதில் அர்த்தமில்லை. உண்மையில் இந்த சிறுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மைகள் வெளிவரும் என்பதையே ரிஷாத் குடும்பத்தாரும் எதிர்பார்த்து வருகின்றனர். அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
அதேபோல் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாங்கள் அறிந்த வரையில் இவரது மரணம் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் நாட்பட்ட பாலியல் தொடர்பு இருந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த காலகட்டத்தில் இருந்தது என்பது தெரியாது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர் மீது எந்த விதமான பலாத்காரமோ, சித்திரவதையோ இடம்பெற்றிருக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. வரும் நாட்களில் நீதிமன்றத்தில் இது ஆராயப்படும். உண்மைகள் கண்டறியப்படும்.
குறித்த சிறுமி இடை நடுவே பாடசாலை கல்வியை நிறுத்தியுள்ளார் என கூறப்படுகின்றது. அந்த காலகட்டத்தில் ஏதேனும் வேறு உறவுகள் இருந்ததா என்பது குறித்தும் பொலிசார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் நிச்சயமாக எமக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். உண்மைகள் தெரிய வரும் வரையில் சகலரும் பொறுமையாக இருக்க வேண்டும் என தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன். இந்த சிறுமியின் பின்னணியில் இருந்த பிரச்சினை என்ன, அவர் எவ்வாறான பாதிப்புகளுடன் இந்த தொழிலுக்கு வந்தார் என்பதும் தெரியாது. ஏழு மாதங்கள் மாத்திரமே ரிஷாத் வீட்டில் பணிபுரிந்துள்ளார். எனவே பின்புலம் என்னவென்பதை எம்மால் கண்டறிய முடியாது. ஆகவேதான் நாம் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்தாது சகல விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றோம். கடந்த சில காலமாக ரிஷாத் பதியுதீனுக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டு வருகின்றது. அரசாங்கமும் சில ஊடகங்களும் திட்டமிட்டு அவரை அரசியலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆகவே இதனை நாம் கவனமாக கையாண்டு வருகின்றோம்.
இந்த சம்பவம் நடந்துவிட்டது, இதனை நியாயப்படுத்த நாம் தயாரில்லை, இது இலங்கையில் இடம்பெற்ற முதல் சம்பவம் அல்ல. அதற்காக ஏற்கனவே நடைபெற்ற சம்பவத்தை எடைபோட்டு கூறவும் இல்லை. ரிஷாத் தவறானவர் அல்ல. நீண்ட காலமாக இதே போன்று சகோதரிகள் அங்கு பணிபுரிந்துள்ளனர். ஆகவே விசாரணை முடிவும் வரையில் அமைதியாக பொறுமையாக இருப்பது அவசியம். ரிஷாத் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் ரிஷாத் பதியுதீனை பார்ப்பதா அல்லது இந்த சம்பவத்தை கையாள்வதா என ஒன்றும் தெரியாது மிகுந்த நெருக்கடிக்குள் உள்ளார்.
எனவே தான் அவர் ஊடகங்களை சந்திக்க முடியாத நிலையில் உள்ளார். எவ்வாறு இருப்பினும் விரைவில் உண்மைகள் வெளிவரும். அதேபோல் அந்த சிறுமியின் தாயாருக்கு சில உண்மைகள் தெரிய வாய்ப்புகள் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் சிறுமியின் தாயார் ரிஷாத் வீட்டிற்கு வந்துள்ளார், நிறைய உதவிகளை பெற்றுள்ளார். எனவே தாய்க்கு பல உண்மைகள் தெரிந்திருக்கும். ஆகவே அவரது தாயாரே இந்த சூழ்ச்சியின் முடிச்சுகளை அவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டார். -Vidivelli
"But she was hired after the age of 16".
ReplyDeleteMr. Ameer Ali, it does NOT matter even if she was under 16 years when she was hired because the minimum age for employment was 14 years until June 2021, when it was increased to 16 years from 14 years.
Please note that Young Persons and Children Act, No. 47 of 1956 as amended had prohibited children up to 14 years of age from working.