Header Ads



இரகசிய திருமணத்தில் இருந்து தப்பியோடியவர்களைத் தேடி வலைவீச்சு - சிலரை மடக்கிப்பிடித்த பொலிஸார்


-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரவெட்டி, காரணவாய் மேற்கு பகுதியில், நேற்று (13), இரகசியமாக நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தேடும் நடவடிக்கை, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புகைப்படப்பிடிப்பாளரின் புகைப்படம் மற்றும் காணொளி ஆகியவற்றை  ஆதாரங்களாகக் கொண்டு, அவர்களைத் தேடிப் பிடித்து, தனிமைப்படுத்துதவதற்கான நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட காரணவாய் மேற்கு பகுதியில்,  மணப்பெண் வீட்டில், சுகாதார பிரிவின் அனுமதியின்றி திருமண நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இதில், கட்டுவனை பகுதியைச் சேர்ந்த மணமகன் குடும்பம் மற்றும் உறவினர்கள் என 50க்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த வீட்டுக்குச் பொலிஸார் சென்ற போது, திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த உறவினர்கள் பலரும், அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதை தொடர்ந்து அங்கிருந்த மணமக்கள் வீட்டார், குருக்கள், புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட சிலரை பொலிஸார் மடக்கி வைத்ததுடன், அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கும் தகவல் வழங்கினர்.

இதையடுத்து, அங்கு வந்த சுகாதார பிரிவினர், மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

அத்துடன், புகைப்படப்பிடிப்பாளர்களிடம் இருந்து புகைப்படம் மற்றும் காணொளிகளைப் பெற்று, நிகழ்வில் கலந்துகொண்ட ஏனையவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை, சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.