Header Ads



மண் ஏற்றிச்சென்ற டிப்பரும், தேங்காய் ஏற்றிவந்த வாகனமும் மோதல் - ஒருவர் வபாத்


- எஸ்.எம்.எம்.முர்ஷித், 
எச்.எம்.எம்.பர்ஸான் -

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் (ஏ 11 வீதி) 119வது மைல் கல்லுக்கு அருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜெயபெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் இருந்து கொழும்பு நோக்கி மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் புத்தளத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி தேங்காய் ஏற்றி வந்த படிரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்ததில் அதன் உதவியாளர் தளத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் அதன் சாரதி காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் வயல் அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் பழுதடைந்த நிலையில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த போது அதற்கு இடமளித்து பயனிக்கும்போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீராவோடை எம்.பி.சி.எஸ் வீதி மீராமுகைதீன் முஹம்மது மன்சூர் (வயது 39) என்ற குடும்பஸ்தரே உயிர் இழந்துள்ளவராவார். ஓட்டமாவடியை சேர்ந்த நாகூர் முகம்மது ஹனீபா என்பவரே காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இறந்தவரின் ஜனாஸா மருத்துவ பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக தேங்காய் ஏற்றி வந்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனமும் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.