இம்ரானின் உரை ரத்து, கட்சித் தலைவர்கள் சபாநாயகர் மீது கண்டனம்
- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் -
பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று வியாழக்கிழமை, 18 ஆம் திகதி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனா தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பிரதான விவகாரமாக, பாகிஸ்தான் பிரதமர்இம்ரான்கான் இலங்கை பாராளுமன்றத்தல் ஆற்றவிருந்த, உரை ரத்துச் செய்யப்பட்டது தொடர்பில் தமது கடும் கண்டனத்தை, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இம்ரான்கானின் வருகை தொடர்பில் தம்முடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்துவிட்டு, தம்மை ஆலோசிக்காது அவரது உரை ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில், எதிர்க்கட்சி சார்பில் பங்கேற்றவர்கள் சபாநாயகர் மீது தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சபாநாயகர் எதனடிப்படையில் இம்ரான்கானின் உரையை ரத்துச்செய்தார்? எவரிடம் இருந்தாவது அழுத்தம் பிரயோகிகப்பட்டதா? யாரின் கட்டளைக்கு இணங்கி இம்ரானின் உரை ரத்துச் செய்யப்பட்டது? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
எனினும் கொரோனா காரணத்திற்காகவே இம்ரான்கானின் உரை ரத்துச்செய்யப்பட்டது, என்ற விபரத்தை சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சபாநாயகரின் கருத்துடன், எதிர்கட்சிகள் உடன்பட மறுத்துள்ளன.
இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் இம்ரானின் உரை ரத்துச் செய்யபட்டது தொடர்பிலான அறிக்கையில், எதிர்கட்சியின் இணக்கமின்றியே பாகிஸ்தான் பிரதமர் இலங்கை பாராளுமன்றத்தில் ஆற்றவிருந்த உரை ரத்துச்செய்யப்பட்டதாக, அறிக்கையிட வேண்டுமென எதிர்கட்சி வலியுறுத்தி கூறியதையடுத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
Post a Comment