மிகவும் அபாயமான சூழலை நோக்கியே, நாம் சென்று கொண்டிருக்கின்றோம் - GMOA எச்சரிக்கை
(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது முதியோர் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கொழும்பு முகத்துவாரம் முதியோர் இல்லத்தில் கொவிட் -19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைப் போன்று ஏனைய பகுதிகளில் இடம்பெறாமலிருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறில்லை என்றால் ஏனைய நாடுகளைப் போன்று முதியவர்களின் உயிரிழப்புக்கள் அதிகரிக்கக் கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (21) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
உலகலாவிய ரீதியில் நாம் எந்தக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து அதற்கேற்ப முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
எதிர்காலத்தில் மிகவும் அபாயமான சூழலை நோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். முன்னரை விட 70 சத வீதம் வைரஸ் பரவல் உலக நாடுகளில் அதிகரித்துள்ளது.
குளிர் காலம், பண்டிகைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், முதலாம் அலையை விட இரண்டாம் அலையில் பாதிப்புக்கள் அதிகமாகவே காணப்படும் என்பதால் ஐரோப்பிய நாடுகள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment