Header Ads



3650 கிலோ கிராம், மஞ்சளுடன், 13 பேர் கைது


புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி ஏத்தாளை மற்றும் பெரியபாடு ஆகிய கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 3650 கிலோ கிராம் மஞ்சளுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கற்பிட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தாளை பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 2045 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து குறித்த மஞ்சளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றும், மோட்டார் சைக்கில் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதேவேளை, உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாடு கடற்பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது 1600 கிலோ கிராம உலர்ந்த மஞ்சளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு டிங்கி இயந்திரப் படகுகளும், கெப் வண்டி ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 வயது முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் இவர்கள் புத்தளம், ஏத்தாளை, கொத்தாந்தீவு, பாலாவி, மதுரங்குளி மற்றும் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் மூடைகள் கிருமி தொற்று நீக்கி தெளித்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். 

-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

1 comment:

  1. இந்த மிருகததனமாக சட்டததை நீக்கி பொதுமக்களுக்கு இறக்குமதி செய்த மஞ்சலைப்பாவிக்க அனுமதிக்குமாறு அாசாங்கத்தை கேட்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.