Header Ads



பாதாள தலைவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு குறிவைப்பு - அங்கொட லொக்காவின் மனைவியின் கணக்கில் 2 கோடி ரூபா பணம் !


( எம்.எப்.எம்.பஸீர்)


இந்தியாவுக்கு தப்பியோடிய நிலையில், அங்கு மாரடைப்பால் உயிரிழந்ததாக நம்பப்படும் பிரபல பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா எனும் மத்துமகே லசந்த பெரேராவின் மனைவியின் வங்கிக் கணக்கொன்றில் உள்ள 2 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தொகை தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த நிசங்சலா என்பவரின் வங்கிக் கணக்கு தொடர்பிலேயே இவ்வாறு விஷேட விசாரணைகளை  தாம் ஆரம்பித்துள்ளதாக,  நுகேகொடை வலய குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்ருக்கு விஷேட  முதல் தகவல் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளனர்.


 இதேவேளை அங்கொட லொக்காவின் மிக நெருங்கிய சகாவாக கருதப்படும், தற்போது டுபாய்க்கு தப்பியோடியுள்ளதாக நம்பப்படும்  பலித்த பிரியங்கர என்பவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும்  விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையார்கள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். 


அத்துடன் மற்றொரு சகாவான  தற்போது கைது செய்யப்பட்டுள்ள ' சிம்பு சமன் ' எனப்படும்  நபரின்  வங்கிக் கணக்கு தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.


 பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் ஊடாக சம்பாதிக்கப்பட்ட கறுப்புப் பணம் தொடர்பில் இடம்பெறும் விஷேட விசாரணைகளில் ஒரு பகுதியாக மேற்படி விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.