ஞாபகம் வரும்போதெல்லாம் வில்பத்து பற்றிப் பேசி, நிரூபித்துக் கொண்டிருக்கிறாய் உன் தேசபக்தியை
- Ashroff Shihabdeen -
தேசபக்தி
---------------
மழை பெய்தால்
உன் கூரைத் தண்ணீர்
தெருவில் கொட்டித் தெறிக்கிறது
தெருவோர மதிலோரம் நிற்கும்
உனது மரங்களின் பழுத்த இலைகளும்
சருகுகளும்
தெருக் கானை அடைத்து
நாற்றத்தை உண்டு பண்ணுகின்றன
வாழ்வின் அவசரத்தில்
வாகனத்துக்குள்ளே சாப்பிட்டுக் குடித்து
பிளாஸ்டிக் போத்தல்களையும்
பொலித்தீன் பைகளையும்
கண்ணாடி இறக்கித்
தெருவில் வீசுகிறாய்
பயணத்தின் போது காற்சட்டை இறக்கி
அடி மரமொன்றில்
சிறுநீர்ப்பாசனம் செய்கிறாய்
நாய்கள் போல
நான்கு விதமான குப்பைத் தொட்டிகள்
பிரித்து வைக்கப் பட்டிருந்தாலும்
தோன்றியபடி போட்டுவிட்டுத்
தூரப் போய்விடுகிறாய்
ஐந்தறிவு ஜீவியாக
கொழும்பில் கொட்டும் குப்பையை
புத்தளத்தில் கொட்டுவதால்
நாடு சுத்தமாகிவிடும்
என்று நம்பும் நீ
ஞாபகம் வரும்போதெல்லாம்
வில்பத்து பற்றிப் பேசி
நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்
உன் தேசபக்தியை!
21.03.2019
Post a Comment