அவசியத் தேவை, அவசரமாக உணரப்படுமா..?
(எம்.எம்.ஏ.ஸமட்)
எவ்வித தனிக்கையும் தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமாகும். கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணைவாக முன்னிறுத்தப்படுகிறது.
ஒரு நபரின் கருத்தை மற்றுமொரு நபர் புரிந்துகொள்ள வேண்டுமாயின் அவர் அறிந்த, தெரிந்த மொழியில் அவரிடம் முன்வைக்கும்போதே அவரால் இலகுவில் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், மொழி ஒரு நாட்டினுடைய தனி மனிதனுடைய வாழ்வின் முக்கிய அம்சமாக இருக்கிறது.
சனத்தொகை எண்ணிக்கை அடிப்படையில் உலகில் 59வது இடத்தை இலங்கை வகிக்கிறது. நம் நாட்டில்; ஏறக்குறைய 2 கோடியே 30 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 74 வீதமானோர் தாய்மொழியாகச் சிங்களத்தையும் 18 வீதத்தினர் தாய் மொழியாகத் தமிழையும் 8 வீதமானோர் ஏனைய மொழிகளையும் பேசுகின்றனர். இருப்பினும், இலங்கையின் சனத்தொகை எண்ணிக்கiயில் 14 வீதத்தினரே ஆங்கில மொழியைப் பேசுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
எனவே, இந்நாட்டில் வாழும் மக்களின் கருத்துக்கள் அதிகளவில் பகிர்ந்துகொள்ளப்படுவது சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் என்பது புலப்படுகிறது.
ஒரு நாட்டில் ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் கருத்து வெளிப்பாட்டை எடுத்துச் செல்லும் ஓரலகாக ஊடகம் விளங்குகிறது. ஊடகம் என்பது ஒரு சுதந்திர நாட்டின் நான்கு தூண்களில் ஒன்று. ஏனைய மூன்றும்; சட்ட மன்றம், நிர்வாகம், நீதிமன்றம் என்பனவாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒரு சமூகத்தின் அல்லது ஒரு இனத்தின் உரிமைகள் அதிகாரத் தரப்பினால் அல்லது மற்றுமொரு சமூகத்தினால் அல்லது அச்சமூகத்தைச் சார்ந்த ஒரு குழுவினால் மறுக்கப்படுகின்றபோது அல்லது மீறப்படுகின்றபோது அல்லது பறிக்கப்படுகின்றபோது அவை தொடர்பில் பாதிக்கப்படும் சமூகம் அல்லது இனம் தமது நிலைப்பாட்டை, தாம் பாதிக்கப்படும் விதத்தினை, எதிர்நோக்கும் விளைவுகளை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது பொதுவான நிலையாகும்
இந்நாடு காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கிய சவால்களையும், நெருக்கடிகளையும் விடவும் சுதந்திரத்தின் பிற்பட்ட காலத்தில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளும்; சவால்களும் அதிகம் என்றே சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்;.
1980 களின் பிற்பட்ட காலத்தில் உருவான யுத்த சூழ்நிலைகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் சமூகமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்புக்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகமும் எதிர்கொண்ட விளைவுகளின் நிதர்சனங்களை இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள மக்கள் முழுமையாக அறிந்திருக்க சந்தர்ப்பம் இருக்கவில்லை.
ஏனெனில், பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பெரும்பாலான மக்கள், நாட்டு நடப்புக்களையும் ஏனைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் இதர விடயங்களையும் அறிந்துகொள்வது சிங்கள மொழி ஊடகங்கள் வாயிலாக மாத்திரமே என்பது அறிந்த விடயம்..
அச்சிங்கள மொழி ஊடகங்கள் எந்தளவு தூரத்திற்;கு சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் நெருக்கடிகளை ஊடகத் தர்மத்துடனும் நடுநிலைபோக்குடனும் பிரசுரிக்கிறது என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
அது தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குள்ளும் வெளியிலும் வாழும் தமிழில் வாசிக்க முடியாத, கேட்டு விளங்கிக்கொள்ள இயலாத முஸ்லிம்களும் வடக்கு கிழக்கில் இச்சமூகங்கள் எதிர்கொண்ட இன்னல்களை அறியாத, தெரியாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பது அவர்களுடன் பேசுகின்றபோது அறியக் கூடியதாக இருக்கிறது.
இந்த நிலைமைக்குக் காரணம் வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் இந்நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் பரவலாக வாழும் சிறுபான்மை தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான உண்மைக்குண்மையான செய்திகளும் அவை தொடர்பான கருத்துக்களும் விமர்சனங்களும் சிறுபான்மை சமூகத்திலிருந்து வெளிவரும் தமிழ் மொழி ஊடகங்களைத் தவிர மாற்று மொழி ஊடகங்கள் வாயிலாக, குறிப்பாக சிங்கள மொழி மூலமான ஊடகங்கள் ஊடாக முழுமையாக வெளிவருவதில்லை என்ற கருத்தே தமிழ்பேசும் சமூக ஆர்வலர்களின் கருத்தாகவுள்ளது.
சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பான செய்திகளும் சம்பவங்களும் ஓளி ஒலி வடிவங்களால் கிடைக்கப்பெற்றாலும,; அறிந்துகொள்ளப்பட்டாலும் அவை மிக நீண்ட காலங்களுக்கு நம் மனங்களில் நிலைத்திருப்பதில்லை. ஆனால், எழுத்து வடிவிலான செய்திகளும் கட்டுரைகளும் கிடைக்கின்றபோது, அவற்றை வாசித்து அறிந்துகொள்ளவும்; நினைவில் நிறுத்திக்கொள்ளவும் முடிவதுடன் மாத்திரமின்றி, அவற்றை மீட்ட வேண்டும் என்ற தேவை ஏற்படும்போது, அச்சு வடிவிலான அச்செய்திகளும் கட்டுரைகளும் துணைபுரிகின்றன.
ஏனெனில,; ஒலி, ஒளி வடிவில் கிடைக்கின்ற விபரங்களை எல்லோராலும் பதிவு செய்து வைத்துக்கொள்ளவது என்பது இயலாத காரியமாகும். ஆனால் ஒரு செய்தித்தாளை இருபது ரூபாவோ அல்லது 30 ரூபாவோ கொடுத்து வாங்கிப் படித்துவிட்டு தேவையெனின் தேவையான பகுதியை வெட்டி எடுத்துக்கொள்ளவும் முடிகிறது.
இலங்கையில் வெளிவருகின்ற பத்திரிகைகளை நோக்குகின்றபோது, தினசரி ஐந்து சிங்கள மொழிப் பத்திரிகைகளும் 5 தமிழ் மொழிப் பத்திரிகைகளும் 4 ஆங்கில மொழிப் பத்திரிகைகளும் வெளிவருகின்றன. அதேபோல், வார வெளியீடுகளாக சிங்கள மொழியில் 10க்கும் மேற்பட்ட பத்திரிகைகளும் தமிழ் மொழியில் 8க்கும் மேற்பட்ட பத்திரிகைகளும் ஆங்கில மொழியில் 4க்கு மேற்பட்ட பத்திரிகைகளும் வெளிவருகின்றன. அவற்றுடன் வாராந்த, மாதாந்த சஞ்சிகைகளும் வெளிவருகின்றன. இவை தவிர 60 வானொலி சேவைகளும் 13 தொலைக்காட்சி சேவைகளும் இயங்குகின்றன. அத்துடன் பல இணையத்தளங்களும் உடனுக்குடன் செய்திகளையும் கட்டுரைகளையும் பதிவு செய்வதுடன் அவையும் சமூகங்கள் தொடர்பில் தங்களுக்குரிய பங்களிப்புக்களை செய்கின்றன.
இவ்வாறு, ஊடகங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துக்கொண்டு சென்றாலும், சென்றடைய வேண்டிய செய்திகளும் தவகல்களும் காலத்தின் தேவைக்கேற்பவும், சமூகங்களின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் ஏற்பவும், அவரவருக்குரித்தான விதத்தில் அவரவர் நிலைமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் சென்றடைகின்றனவா? இடம்பெறுகின்ற நிகழ்வுகள் அதனால் பாதிக்கப்படுகின்ற சமூகங்களின் நிலைமைகள் திரிவுபடுத்தப்படாமல் நிதர்சனமாக வெளிப்படுத்தப்படுகின்றனவா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில் இத்தகைய ஊடகங்களினால் பிரசுரிக்கப்படும் செய்திகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் ஒரு சமூகத்தை அல்லது சமூகங்களின் ஒற்றுமையைப் பாதிக்கதாவிதத்திலும் சம்பவங்களைத் திரிவுபடுத்தாத விதத்திலும் இனமுறுகளை தோற்றுவிக்காத வகையிலும் ஊடக தர்மத்தோடு வெளிவருவதற்;கு முக்கியத்துவம் வழங்குவது அவசியம் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆலோசனையாகவுள்ளது. .
இனி, யுத்த முடிவின் பின்னரான இந்நாட்டின் அமைதிச் சூழ்நிலையில் அமைதியைக் குழைப்பதற்காக பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலிருந்து அச்சமூகத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, அச்சமூகத்தை நல்வழிப்படுத்துகின்ற பணியைப் புரியவேண்டியவர்கள் மத வன்முறையாளர்களாக மாறி இந்நாட்டில் வாழுகி;ன்ற சிறுபான்மை சமூகத்திற்கெதிராக அச்சமூகங்ளின் சமய, சமூக பண்பாட்டு, கலை, கலாசார உணவு உடை திருநாட்கள் என சகல நடவடிக்கைகளிலும் மூக்கை நுழைத்து, அவற்றிற்கு எதிராக மூன்றாம் சக்திகளின் ஒத்துழைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருப்பதை தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியிலிருந்து வெளிவரும் அச்சு ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திக்;கொண்டிருக்கின்றன.
தமிழ் மொழி ஊடகங்களால் அம்மதவாத வன்முறையாளர்களின்; செயற்பாடுகள் விமர்சிக்கப்பட்டும் கண்டிக்கப்பட்டும் வெளிவரும் செய்திகளையும் கட்டுரைகளையும் அதற்காக வேண்டி நிற்கும் தீர்வுகளையும் தமிழ் பேசும் சமூகங்களே பார்த்துவிட்டு தங்களுக்குள்ளேயே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்;கள். தமிழ் பேசும் சமூகங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதனால் எதிர்ப்பு அறிக்கைகளை விட்டுக்கொள்வதனால் கிடைக்கப்பெறுகின்ற அடைவுகள் எதிர்பார்க்கின்ற இலக்கை அடைவதற்குரிய அடைவுகளாக அமையாது.
ஆனால், எச்சமூகத்தில் உள்ளவர்களிடையே சிறுபான்மை சமூகங்களின் செய்திகள் சென்றடைய வேண்டும் என்ற இலக்கு உள்ளதோ அந்த இலக்கை அடைவதற்கான முயற்சிகள் தேசிய மட்டத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ளனவா, என்ற கேள்வி நிலவுகிறது.
இதனால், பெரும்பான்மை சமூகத்திலுள்ள பெரும்பாலான மக்களால் அங்கீகரிக்கபபடாத வன்முறையாளர்களைக் கொண்ட இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் குறித்து தமிழ் பேசும் சமூகங்களால் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களும் நியாயங்களும் வேண்டி நிற்கும் தீர்வுகளும் சிங்கள மொழி ஊடாக சிங்கள மக்களிடையே சென்றடைவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படுதல் அவசியம்.
நடுநிலையாக இருந்து சிந்திக்கின்ற சிங்கள மக்களிடையே தமிழ் பேசும் சமூகங்களின் கருத்துக்கள்; தினசரி சென்றடைய வேண்டுமானால் சிங்கள மொழியிலான தினசரி அச்சு ஊடகம் உருவாக்கப்படுவது இச்சிறுபான்மை சமூகங்களின் அதி முக்கிய தேவையாகக் கருதப்பட வேண்டும்.
வர்த்தக நோக்கங்களைத் தவிர்த்து, இவ்வரு சமூகங்களும் நாளாந்தம் எத்தகைய நெருக்கடிகளை எதிர்நோக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் தமிழ் ஊடகங்களின் செய்திகளும் கட்டுரைகளும் மொழிபெயர்புச் செய்யப்பட்டு குறைந்த பட்டம் ஒரு பொழிபெயர்ப்பு பத்திரிகையாவது சிங்கள மொழியில் இரு சமூகத்திலுமிருந்தும் வெளிவருவது காலத்தின் கட்டாயம் என்று உணரப்படுவது அவசியமாகவுள்ளது.
அதிகாரத்தரப்பினாலும், அகிம்சையைப் போதிக்க வேண்டிய பௌத்த துறவிகளினாலும் மேற்கொள்ளப்படுகின்ற அநீதியான, அநாகரிக செயற்பாடுகளுக்கெதிராக பலமான கருத்தாடல்கள், கருத்துக்கள் தமிழில் எழுப்பப்படுவது நியாயமாகவுள்ள போதிலும், அக்கருத்து வெளிப்பாட்டின்; எதிரொலிகள் சிங்கள மொழியிலும் நேர்மையாகச் சிந்திக்கக் கூடியவர்களின் செவிகளில் சங்கமிக்க வேண்டும், அதனூடாக இருபக்க நியாயங்களையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். இந்நிலை உருவாக வேண்டுமாயின் நிச்சயம் விரையில் ஒரு சிங்கள மொழி தினசரிப் பத்திரிகை இரு சமூகத்திலும் இருந்து தோன்ற வேண்டும் என்பது சமூகங்கள் சார்பில் கருத்துக்களை வெளிப்படுத்த விரும்புகின்ற சமூக ஆர்வலர்களின் அவாவாகவுள்ளது.
தமிழை சிங்களத்திலும் சிங்களத்தை தமிழிலும் பொழிபெயர்ப்புச் செய்யும் ஆற்றல் உள்ளவர்கள் இரு சிறுபான்மைச் சமூகத்திலும் உள்ளனர். குறைந்தபட்சம் அவர்களின் உதவியைக் கொண்டு விற்பனைக்கில்லாவிடினும் இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகம் அதிகம் வாழும் நகரங்கள் மற்றும் கிரமாங்கள் தோரும் உள்ள நூலகங்களுக்காவது இச்சிங்கள மொழி மூல தினசரிப் பத்திரிகையை அச்சிட்டு அனுப்புவதன் மூலம், இரு சமூகங்களும் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளுக்கு உடனடித் தீர்வு கிடைக்காவிடினும் இத்தகைய பிரச்சினைகளை தேவைகளை இச்சமூகங்கள் எதிர்நோக்குகின்றன என்பதையாவது பெரும்பான்மை சமூகத்திலுள்ள நடுநிலைவாதிகளுக்கு அறியப்படுத்த முடியும.; அத்துடன் மொழியினுடான ஒரு கருத்து ஒருமைப்பட்டையும் புரிதலையும் தோற்றுவிக்க முடியுமென்பதில் சந்தேகமில்லை.
அந்தவகையில,; இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை பெரும்பான்மை சிங்கள மொழி பேசும் மக்களை அறிந்து கொள்ளச் செய்வதற்காகன் உணர்வு ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வுணர்வானது வாராந்த மாதாந்த சஞ்சிகைகளாக வெளி வருகின்ற போதிலும் அம்முயற்சிகளுக்கு பாரியளவில் ஒத்துழைப்புக் கிடைப்பதாகத் தெரியவில்லை.
இதனடிப்படையில், தமிழ் பேசும் சமூகம் எதிர்நோக்கும் நெருக்கடிகளை சிங்களம் பேசும் மக்களும் அறிந்துகொள்ள வேண்டுமாயின் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் சென்று இரு சிறுபான்மை சமூகங்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், தேவைகள் சுடச்சுட சமூக ஒற்றுமைமைச் சீர்குழைக்காத வகையிலும்;, இனமுறுகலை ஏற்படுத்தாத வகையிலும் வெளிப்படுத்தப்படுவதற்கு சிங்கள மொழியிலான தினசரி பத்திரிகை இருசமூகங்களின் மத்தியிலிருந்தும் வெளிவருவது அவசியமாகவுள்ளது. இந்த அவசியத் தேவை அவசரமாக உணரப்படுமா? என்பதே சமூக ஆர்வலர்களின் இன்றைய வினாவாகும்..!
.jpg)
Post a Comment