Header Ads



மீண்டும் சந்தைக்கு வந்துள்ள அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிட விவகராம்..!


(கழுகுப்பார்வை)

அபிவிருத்திகள் என்பது மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்வதாகும். மக்களே ஒன்றுசேர்ந்து அந்த அபிவிருத்தி எமக்குத் தேவையில்லை என்கிறபோது அதனை விட்டுவிடுவதுதான் நல்லது. அந்தவகையில் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தின் குறிப்பாக அம்பாரை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைக் கிராமத்தின் சந்தையை புதிதாக அமைக்கும் விடயத்தில் அரசியல்வாதிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் இழுபறிநிலை  ஒன்று தொடர்ந்து செல்வதாகக் கூறப்படுகின்றது. ஆளும் அரசில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு உதாரணமாகும். அபிவிருத்தி என்பது மக்களுக்கானது. மக்கள் அந்த அபிவிருத்தியை செய்;;யவிடாமல் தடுப்பதற்கும் பல காரணங்கள் இல்லாமலில்;லை. ஆனால் அதனைச் செய்தே தீருவோம் என்பது பலாத்காரத்தைப் பிரயோகிக்கும் செயலாக அமையும் அல்லவா? இணங்கினால் நல்லது. இணங்காவிட்டால்; அது தங்கமாக இருந்தாலும் அது தேவையில்லை என்பதுபோலவே அட்டாளைச்சேனையின் சந்தைக் கட்டிட நிலைமையும் காணப்படுகின்றது. 

சரி களத்திற்குச் செல்வோம். கடந்த மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் புதிய சந்தைக்கான கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக மாகாண அமைச்சராக இருக்கின்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம். எஸ். உதுமாலெவ்வை தனது கட்சி அமைச்சரான அதாஉல்லா சகிதம் ஊரில் இடம் ஒன்றைத் பலநோக்கச் சங்கம் அமைந்துள்ள இடத்தில் சந்தைகான கட்டிடம் ஒன்றைக் கட்டியும் திறந்தனர். ஆனால் மக்கள் அந்த இடத்தை நாடவில்லை. காரணம் அக்கட்டிடம் ஊரின் ஒரு ஒதுக்;குப்புறமாக இருக்கின்ற காரணத்தினால் மக்கள் அங்கு செல்லவே மாட்டார்கள் என்பதால் மீண்டும் சந்தைக்கான பிரச்சினை தோற்றம் பெறலாயின.

பின்னர் தற்போதைய சந்தை அமைந்துள்ள இடம் காலாகாலமாக சந்தைச் சதுக்கம் என்று அழைக்கப்படுகின்ற ஒரு இடமாகும். இந்தச் சந்தையின் பின்னால் உள்ள பகுதியில் அட்டாளைச்சேனையின் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசல் அமைந்திருக்கின்றது. இப்பள்ளிவாசல் மூன்று மாடிகளில் வீற்றிருக்கும் அழகிய தோற்றம் மறைக்கப்படுகின்;;றது என்பதைக் காரணமாக கொண்டு பழைய பிரதேச சபைக் கட்டிடத்தை உடைத்து உடனடியாக புதிய பிரதேச சபைக் கட்டிடத்தையும், அதனோடு இணைந்தாக பொது வாசிகசாலையையும் அமைச்சர் உதுமாலெவ்வை தனது தலைவரான அமைச்சர் அதாஉல்லாவுடன் இணைந்து உடனடியாக கட்டுவித்தார்.

இக்கட்டிடத்திற்காக பழைய சந்தைக் கட்டிடத்தையும், பழைய பிரதேசசபை, வாசிகசாலைக் கட்டிடங்களையும் உடைத்து அழகிய பள்ளிவாசலின் தோற்றம் பிரகாசமாக தெரியும் வண்ணம் புதிய வாசிகசாலையுடன் இணைந்ததாக புதிய பிரதேச சபைக்கான கட்டிடம் அமைக்கப்பட்டு அமைச்சர்களினாhல் திறந்துவைக்கப்பட்டன. அப்போது மக்கள் உண்மையில் அமைச்சர்கள் செய்ததுதான் சரி என்றும் பேசிக்கொண்டார்கள். அப்போது சந்தையாக காணப்பட்ட கட்டிடங்களுக்குப் பதிலாகவே சந்தை அமைக்கப்படவேண்டுமென்ற விடயத்தை அமைச்சரின் உறுதிமொழியுடன் பெரிய பள்ளிவாசல் அனுமதியுடன் கட்டித்தரப்படும் என்றும் அப்போது கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அதற்குப் பகரமாக சந்தை இருந்த இடத்தில் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தையே அமைச்சர்கள் கட்டிக் கொடுத்தார்கள். ஒருவகையில் அதுவும் பள்ளிவாசலுக்கு ஒரு நிரந்தர வருமானத்தைப் பெறுகின்ற ஒருநோக்கில் பரவாயில்லை என்று பலரும் பேசிக்கொண்டனர். இந்த மண்டபத்திற்கும், தற்போதைய பிரதேச சபைக்குமிடையே பள்ளிவாசலுக்குச் செல்வதற்கான ஒரு பாதையும் உண்டு. இவை இரண்டுக்கும் இடையிலான தூரம் சுமார் 50 அல்லது 60அடிகளே உள்ளன. சுமார் 75ஓ60அடி பரப்புக்குள் சந்தை ஒன்றை அமைக்கவேண்டும் என மீண்டும் ஊர்மக்களும், உள்ளுர் மக்;களின் அமோக ஆதரவுடன் இயங்கிய அரசியல்வாதிகளும் கோரிக்கை விட்டனர்.

அப்போது உள்ளுரில் பலம்பொருந்திய அரசியல்வாதியாக இருந்த தற்போதைய மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை அவர்கள் தனது சொந்த ஊரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுக்கொண்டு வந்தகாலம். அவரது சேவையின் பயனாக அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நீண்டகாலமாக நீரினுள் மூழ்கியிருந்த காணிகளை விடுதலை செய்த பெருமை அமைச்சர் உதுமாலெவ்வையைச் சாரும். அதேநேரம் எங்களுக்கு அபிவிருத்தியே வேண்டாம் என்று ஒருசிலர் கூக்குரலிட்டபோதிலும் தன்னாலான சேவைகளை செய்து வந்தார் அமைச்சர். அப்போதும்கூட அட்டாளைச்சேனைப் பிரதேச மக்களின் அமோக ஆதரவு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கே உரியதாக இருந்தது. இன்றுகூட இக்கட்சியினரின் கட்டுப்பாட்டிற்குள்தான் பிரதேச சபையும் காணப்படுகின்றது. அந்தவகையில் அமைச்சரின் சேவையை புறக்கணிப்போரும் உண்டு. 

காலஞ்சென்ற முன்னாள் பிரதேசசபையின் தவிசாளரும், மாகாண சபையின் உறுப்பினராவும், அட்டாளைச்சேனையில் அமைச்சர் உதுமாலெவ்வை மற்றும் அமைச்சர் அதாஉல்லா ஆகியோருக்கு அரசியல் ரீதியாக தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருந்த படையப்பா என்று செல்லமாக அழைத்த மசூர் சின்னலெவ்வை தொடராக விடுத்திருந்த சந்தைக் கட்டிடத்திற்கான தேவையை உணர்ந்த அரசார்பற்ற நிறுவனம் மேற்கூறிய அமைச்சர்களின் உதவியுடன் சந்தை ஒன்றை மீண்டும் அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியது. அப்போது மசூர் சின்னலெவ்வை மாகாண சபையில் எதிர்கட்சியில் இருந்தார். அட்டாளைச்சேனையின் பிரதேச சபை தவிசாளராக அதே ஊரைச்சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, அரசியலில் நுழைந்த காலம். இந்நிலைமையில் தன்னுடைய ஊரில் கட்டப்படும் சந்தையில் தனக்குப் பாரிய பங்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தும் நோக்குடன் தனது செல்வாக்கை பிரயோகித்து சந்தைக் கட்டிடம் அமைக்கப்படவிருக்கின்ற பிரதேச சபை மற்றும் பழையசந்தை அமைந்துள்ள அந்தச்சிறிய பிரதேசத்தில் கட்டுவதற்கான நடடிவடிக்கைகளை மேற்கொண்டபோது அமைச்சர் உதுமாலெவ்வை தனது ஊரில் கட்டப்படும்ட சந்தையின் தோற்றத்தால் பள்ளிவாசலின் தோற்றம் மறைக்கப்படும் போன்ற காரணங்களை வைத்து ஒரு பிரேரiணையை மாகாண சபையில் அப்போதைய முதலமைச்சரான திருவாளர் சந்திரகாந்தனின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். 

முகா. தலைவரான றஊப் ஹக்கீம் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தார். அவரைக் கொண்டு கல் நாட்டப்பட்டபோதிலும் ஆளும் அமைச்சர்களின் அதிரடி நடடிவடிக்கையினால் அது நிறைவேறவில்லை. இழுபறி தொடர்ந்தது. சந்தை அமைப்பதானால் பின்னாலுள்ள பள்ளிவாசல் எக்காரணம் கொண்டும் மறையக்கூடாது என்பதை அழுத்தமாக கூறினார் அமைச்சர் உதுமாலெவ்வை. மக்களில் ஒருபகுதியினர் ஏற்றுக் கொண்டனர். மற்றையப் பகுதியினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் பிரச்சினை விஸ்பரூமாகி முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரான டாக்டர் துறையப்பா நவரட்ணராஜா தலைமையில் பல ஒன்றுகூடல்களை நடாத்தி இறுதியில் ஒன்பது விடயங்களில் சமரசம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்களாம் என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது. அப்போது அன்றிருந்த அட்டாளைச்சேனையின் தவிசாளர் தலைமையில் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களும், அமைச்சர் உதுமாலெவ்வைக்கு ஆதரவான ஒரு குழுவினரும் கலந்துபேசி இறுதியில் இம்முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும் தந்போதைய சந்தை உள்ள இடத்திலேயே அமைப்பது என்றும் பள்ளியை மறைக்காமல் கட்டுவது என்றும் முடிவாகினதாகவும் கூறப்பட்டது.

சமரசம் ஏற்பட்ட பலமாதங்களாகியும் சந்தை அமைக்கப்படவில்லை. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. மீண்டும் அமைச்சராக உதுமாலெவ்வை பதவியேற்றார். மசூர் சின்னலெவ்வை மரணமடைந்தார். பிரதேச சபைத் தவிசாளர் தேர்தலில் வெற்றிபெற்று மாகாண சபை உறுப்பினராக நஸீர் பதவியேற்கின்றார். ஆளும் இன்றைய மத்திய அரசியலில் அமைச்சராக றஊப் ஹக்கீம் நீதியமைச்சராகவும், மாகாணத்தில் முகாவினர் அமைச்சர்களாகவும் அமர்கின்றனர். இப்போது எல்லோருமே மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பங்காளிகள். சண்டை பிடித்தவர்கள் எல்லோரும் ஆட்சியில் ஒற்றுமையாக இருக்கின்றனர். இச் சந்தர்ப்பத்பை; பயன்படுத்துகின்றனர் அட்டாளைச்சேனையின் பிரதேச சபையினர். தற்போது அட்டாளைச்சேனையின் பிரதேச சபைத் தவிசாளராக ஏ. அன்சில் கதிரையேறியுள்ளார். 

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பழைய விடயத்தினை மீண்டும் தூசித்தட்டி நெல்சிப் திட்டத்தின் உதவியுடன் சந்தையைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையினர் தடல்புடலாக மேற்கொண்டனர். மாகாண சபை உறுப்பினர் நஸீர் விடே அதிதியாகவும், நெல்சிப் திட்டப் பணிப்பாளர்கள் சகிதம் கல்நாட்டுவிழா கடந்த டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்றது. விழா அமோகமாக நடைபெற்று முடிந்த கையுடன் வேலைகளும் ஆரம்பமாகின. ஊரில் எப்படியோ சந்தை ஒன்று கட்டப்படுகின்றது என்று ஆறுதலடைந்தோறும் உண்டு. அநியாயமாக இந்தப்பள்ளியை மறைக்கின்றார்களே என்று கூறியோரும் உண்டு. எப்படியோ சந்தை அமைப்பதற்கான பணிகளுக்காக இயந்திரங்கள் கொண்டு மடுக்கள் தோன்றப்பட்டன. கம்பிக்கூடுகள் அமைக்கப்பட்டு நடுவதற்காக இருந்தபோது பெய்த கடும் மழையினால் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டது. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைபோல அட்டாளைச்சேனை சந்தை விடயம் கிழக்கு மாகாணத்தில் மீண்டும் ஒருமுறை ஒலித்துக் கொண்டது. 

ஆமாம். அதே ஊரைச் சேர்ந்த மாகாண அமைச்சர், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரின் தலைமையில் தீர்ப்பாக வழங்கிய முடிவின்படி சந்தைக்கட்டிடம் உரிய அம்சங்களையும் உள்ளடக்கியவாறு கட்டப்படுதல் வேண்டும் என்றும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஒரு குழுவாக திட்டத்திற்கு நிதிவழங்கும் நிறுவனத்தின் பிரதிநிதி உள்ளுராட்சி ஆணையாளர், தற்போதைய முதலமைச்சரின் செயலாளர் ஆகியோர் கண்காணித்து அறிக்கை ஒன்றை தரவேண்டும் என்றும் அமைச்சர் உதுமாலெவ்வை மாகாணசபையின் அமைச்சரவையில் முன்வைத்திருந்த முன்மொழிவு கிழக்கு மாகாண அமைச்சரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை அமைச்சரவைப் பேச்சாளராக இருக்கின்ற அதே அமைச்சர் உதுமாலெவ்வை அண்மையில் ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

அமைதியாக இருந்த சந்தை விவகாரம் மீண்டும் சூடுபிடிக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே அமைப்பதாக ஒத்துக் கொண்ட விடயங்களான பள்ளிவாசல் மறைக்காது கட்டப்படுவதில் அமைச்சரும், அவரது கட்சி ஆதரவாளர்களும் விடாப்பிடியாவே உள்ளனர். எப்படியும் இவ்விடயத்தில் எப்படியோ கட்டியே தீருவோம் என்கின்ற விடாப்பிடியில் முகாவினர் உள்ளனர். இப்படியே சென்றால் இறுதியில் சந்தைக் கட்டிடம் வெறும் கணவாக போய்விடுமோ என்று இருபக்கமும் இல்லாத நடுநிலமையாளர்கள் கவலைப்படுகின்றனர். அபிவிருத்தி என்பது மக்களுக்கானது. ஆட்சி அதிகாரம் இருப்பதற்காக நினைத்தமாத்திரத்தில் எதனையும் கட்டவோ, உடைக்கவோ முடியாது. ஜனநாயக மரபில் ஆட்சியாளர்கள் என்போர் மக்களுக்கான பிரதிநிதிகள். மக்கள் எதனை நினைக்கின்றார்களோ அதனைத்தான் ஆட்சியாளர்களும் செய்யவேண்டும்.

எனவே, நடுநிலைமையிலுள்ள அவ்வூர் பொதுமக்களின் பார்வையில் இதுவோர் அரசியல் சித்தவிளையாட்டாகவே தெரிகின்றது என ஒருபாடசாலையின் அதிபரிடம் வினவியபோது தெரிவித்தார். அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த பலவருடங்களாக கட்சிப்போராட்டம் என்றபேரில் அடாவடிகளும், எதேச்சதிகார நிலைமைகளும் நடந்தேறி வந்துள்ளன. ஆளும் அமைச்சர்கள் பாராளுமன்றில் ஒன்றாக இருந்து தோழில் கைபோட்டுக் கொண்டு இருக்க அவர்களை அனுப்பி மக்கள் ஏன் பிளவுண்டு போகின்றார்கள் என்பது அட்டாளைச்சேனையைப் பொறுத்தவரையில் கட்சியரசியல் இரண்டாகப் பிரித்துவைத்துள்ளது. எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் அது கட்சியோடு பின்னிப் பிணைந்தே பார்க்கப்படுகின்றது. பாடசாலையில், தொழிலில், உத்தியோகம் வழங்குவதில், திருமணவீட்டில், மரணவீட்டில், பாதையால் போகின்றபோது, பொருட்கள் வாங்கும் கடை, நண்பர்களாக இருப்பதுகூட கட்சியின் அடிப்படையிலான ஒரு பார்வையாகவே பார்க்கப்படுகின்ற ஒரு கேவலமான அரசியல் சமூகம் அட்டாளைச்சேனையில் இன்றுவரையிலும் உலாவருகின்றது. 

படித்தவர்கள், பாமரர்கள் என்று யாரையும் இது விட்டுவிடவில்லை. இடமாற்றம் என்றாலும் அதனையும் கட்சிரீதியாகவே பார்க்கின்றனர். இவ்வாறான ஒரு பிளவுபட்ட சமூகம் உருப்படுமா என்பதை இரண்டு பக்கமும் சாராத மக்கள் கேள்விதொடுக்கின்றனர். இதனை வெளிப்படையாக பேசுவதிலும் பலவீனர்களாகவே இப்பகுதிவாழ் படித்தவர்களும் இருக்கின்றனர். ஒருகட்சிக்குச் சார்பாக பேசிவிட்டாலே போதும் அடுத்தநாள் அவர் மிரட்டப்படுகின்ற ஒருபோக்கும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றது. இது இல்லாமலாக்கப்பட்டு, ஒரே ஊர் மக்கள், ஒரே இனமக்கள் என்ற அடிப்படையில் கட்சியரசியலை ஒருபக்கம் வைத்துவிட்டு ஊருக்கான, பிரதேசத்திற்கான அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவதற்கு ஒத்துழைக்குமாறு நடுநிலைமையாளர்கள் சார்பாக இந்தவேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. 

சந்தேகப் பார்வையை நிறுத்தி ஊருக்கான எந்த அபிவிருத்தியிலும் கட்சியரசியல்; பார்க்காது ஒன்றிணைந்து சமுதாய மறுமலர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இதை உணர்ந்துகொண்டார்களாக மாறினாலே அபிவிருத்திகள் தானாகவே வளரும். 'நீங்கள் அல்லாhஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு உங்களுக்குள் ஒற்றுமையாய் இருங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் வலிமை குன்றிவிடும்' அல்குர்ஆன்(8.46) திருவசனத்தை ஒருபுறம் மீட்டிப்பாருங்கள் உண்மை தெளிவாகும். 

2 comments:

  1. இறை இல்லத்தை வைத்து ஒரு அரசியலா ?
    யாருக்கு பள்ளி தெரிய வேண்டும் ?
    ஜும்மாவிட்கு மட்டும் வருவோருக்கா ? முதலில் ஐவேளை தொழுங்கள்.

    அமைச்சர் உதுமாலெவ்வை அவர்களுக்கு ..........

    முஸ்லிம் காங்கிரசும், அதன் தலைமையும் சேவை செய்ய முதன் முதலாக ஆசைப் படுகின்றன. பேசாமல் விட்டுப்பாருன்களேன்; முடிக்கிறார்களா என்று ?

    ReplyDelete
  2. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

    "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" என்கிற பிரச்சினை இது.. அழகிய வமக்கச்தலம் இருக்குமிடத்தில் சந்தைத்தொகுதி எதற்கு.

    ஒரே இடத்தில் அனைத்தையும் கொண்டு வந்தால் உரின் எல்லை குறுகிக்கொண்டே போகும் என்பது படித்த மக்களுக்கு தெரியாதா?

    ReplyDelete

Powered by Blogger.