Header Ads



அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம்


 ஈரான் மீதான போர் நீண்டகாலம் தொடருமானால், அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என அல் ஜசீரா (Al Jazeera) அரசியல் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.


ஈரானின் புதிய தலைமை மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதார அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு 'கௌரவமான வெளியேற்ற வழி' (Honorable exit) குறித்து வொஷிங்டன் ஆலோசித்து வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த மோதல் 4 முதல் 6 வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என அமெரிக்க தேசிய பொருளாதாரப் பேரவையின் பணிப்பாளர் கெவின் ஹார்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


அத்துடன், போர் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்னதாகவே முன்னேறி வருவதாகவும், விரைவில் எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


எனினும், இதற்கு மாறாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈரான் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் போராடத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.


ஹோர்முஸ் நீரிணையைத் தொடர்ந்து முடக்கி வைப்பதன் மூலம் உலகளாவிய பணவீக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதே ஈரானின் உத்தியாகப் பார்க்கப்படுகிறது.


"அமெரிக்காவை மீண்டும் ஒரு வெளிநாட்டுப் போரில் ஈடுபடுத்த மாட்டேன்" என்ற தனது தேர்தல் வாக்குறுதியை ட்ரம்ப் மீறியுள்ளதாக அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.


போர் நீண்டகாலம் நீடித்தால், அது நவம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.


இதன் காரணமாகவே, "வெற்றியை அறிவித்துவிட்டு போரிலிருந்து வெளியேறுவதே" (Declare victory and get out) சிறந்தது என வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகள் சிலர் கருதத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.