Header Ads



வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு -முஸ்லிம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படாவின் கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டும் - இம்ரான்


முஸ்லிம் கட்சி  பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படாவின் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசாங்கத்தால் சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்துக்கான  வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்பதில் மக்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

குறிப்பாக இருபதாம் திருத்தம் உள்ளிட்ட அனைத்து வாக்கெடுப்பிலும் முஸ்லிம் கட்சி தலைவர் அரசுக்கு எதிராகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தார்கள்.

இவ்வாறு கட்சியின் தீர்மானத்தை மீறி அரசுக்கு ஆதரவாக  வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக் கட்சிகள் அறிவித்திருந்த போதிலும் வழங்கப்பட்டது என்னவோ கட்சியின் உயர் பதவிகளே. 

இந்த வரவு செலவு திட்டத்துக்கு எதிராக  சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட கருத்து தெரிவிக்கின்றனர்.நான் பாராளுமன்றத்தில் கூறியது போன்று இந்த வரவு செலவு திட்டம் கிழவியை மணப்பெண்ணாக்கும் கதை போன்றது.

இவ்வாறான வரவு செலவு திட்டத்துக்கு இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு வாக்களிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது 

 இந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பிலும் தலைவர் எதிராகவும் உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களிப்பின்  உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டும்.அவ்வாறு எடுக்க முடியாவிட்டால் தலைவர்கள் தமது இயலாமையை ஒப்புக்கொண்டு  பதவி விலக வேண்டும்.

அவ்வாறு இல்லை எனில் இதுவும் மக்களை மடையர்களாக மாற்றும் ஒரு செயற்பாடே என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.