Header Ads



தேவைப்படும் அனைத்து நேரங்களிலும் இலங்கைக்கு எப்போதும் உறுதுணையாக பாகிஸ்தான் இருக்கிறது - மஹிந்தானந்தா


பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் 81 ஆவது பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு  கொழும்பு கிங்ஸ் பரி ஹோட்டலில் வரவேற்புரை நிகழ்வொன்றை நேற்று (23.03.2021) ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில்  விவசாயத்துறை அமைச்சர் திரு மஹிந்தானந்தா அலுத்கமகே  சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திர உறுப்பினர்கள், மற்றும் புத்திஜீவிகளும் இந்நிகழ்வில்  கலந்து சிறப்பித்தனர்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) திரு. முஹம்மது சாத் கட்டாக் தனது வரவேற்புரையில் "1948 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கையின் முன்னாள் பிரதமர், கெளரவ  டி.எஸ்.சேனாநாயக்க, பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த  போது  பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான சகோதரத்துவத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். எங்கள் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து காணப்படுகிறது என்றும் இந்த உறவானது  பெளத்த  மற்றும் இஸ்லாம் மதங்கள்  போதிக்கும் உலகளாவிய அமைதி மற்றும் அன்பினால் இன்னும்  வலுப்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

பிராந்திய பாதுகாப்பு நிலைமை பற்றி அவர் குறிப்பிடும் போது " ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் விவேகமும்  தீவிர கட்டுப்பாடும் உள்ள  ஒரு பொறுப்புள்ள நாடாக செயற் பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் அனைத்து இருதரப்பு மற்றும் பிராந்திய மோதல்களையும் அமைதியான முறையில் தீர்க்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்றும்  தெற்காசியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலோங்க செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் பாராட்டினார்.

பாகிஸ்தான் அரசு அதன் உயர் ஸ்தானிகராலயம் மூலம் இலங்கை மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் 1000 புலமைப்பரிசில்களை வழங்க உள்ளதாக மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) திரு முஹம்மது சாத் கட்டாக் குறிப்பிட்டார். பாகிஸ்தான் காம்சாட் பல்கலைக்கழக அனுசரணையுடன், இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முயற்சிகள் மேகொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர்  மஹிந்தானந்தா அலுத்கமகே தனது உரையின் போது, தேவைப்படும் அனைத்து நேரங்களிலும் இலங்கைக்கு எப்போதும் உறுதுணையாக பாகிஸ்தான் இருந்ததற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் நன்றி  தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை நினைவு கூர்ந்த அவர், பாகிஸ்தானும் இலங்கையும் எப்போதும் நெருக்கமான, நல்லுறவு மற்றும் பரஸ்பர  உறவுகளைப் பேணிவருகின்றன என்றும்  அவை பரந்த அடிப்படையிலான மற்றும் பன்முகத்தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்நிகழ்வில், பாகிஸ்தான் தேசிய தின விசேட கேக்கை உயர் ஸ்தானிகர் மற்றும் பிரதம விருந்தினர் கூட்டாக சேர்ந்து வெட்டியமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. முஸ்லிம்களுக்கு எதிரான அணைத்து விடயங்களுக்கும் பாக்கிஸ்தான் உறுதுணையாக இருந்ததா?

    ReplyDelete

Powered by Blogger.