Header Ads



ஜமாத்தே இஸ்லாம் கொள்கையை பின்பற்றி அடிப்படைவாததத்தை பரப்பியதாக கைதானவர் மீது குற்றச்சாட்டு


சஹ்ரான் ஹஸீமின் சகோதரரான, மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்த ஒருவரும், அடிப்படைவாதத்தை பரப்பிய ஒருவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று -20- கைது செய்யப்பட்டனர்.

மாவனெல்லையில் கைதுசெய்யப்பட்ட 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இலங்கை வந்த அவர், மாவனெல்லை பகுதியில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பில், பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜமாத்தே இஸ்லாம் கொள்கையை பின்பற்றும் அவர், பல்வேறு அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பயன்படுத்திய மடிக்கணினி ஒன்றும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்த சந்தர்ப்பத்தில், ஏதோவொரு வகையில் பல்வேறு அடிப்படைவாத கருத்துக்களின் மூலம் பணம் சேகரித்திருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபரை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேநேரம், சஹ்ரான் ஹஸீமின் சகோதரரான, மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்த, காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர், மட்டக்களப்பு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விசாரணைகளின் பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிந்தார்.

இந்த நிலையில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தடுப்பு உத்தரவில் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க அந்தப் பிரிவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்ட குறித்த நபரினால், பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சஹ்ரான் ஹஸீமின் சகோதரரான, மொஹமட் ரில்வான், சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைக் குணடுத் தாக்குதலில் பலியானார்.

எனினும், கடந்த 2018 ஆம் ஆண்டு, குண்டுகளை பரிசோதித்து பார்த்த சந்தர்ப்பத்தில், அவர் காயமடைந்திருந்தார்.

இதையடுத்து, அவரை இரகசியமான முறையில் கொழும்புக்கு அழைத்துவந்து, சிகிச்சை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுடன் காத்தான்குடியை சேர்ந்த நபருக்கு தொடர்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

இதற்கமையவே, பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரிடமும், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.