Header Ads



எவருடனும் முரண்படாது மென்மையாக ஆராவாரமின்றி பெருமையின்றி பழகக்கூடிய கலீலுர் ரஹ்மான் - உருக்கமான அனுதாபம்


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும் செய்தி வாசிப்பாளரும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளருமான சம்மாந்துறை ஏ.சீ.எம். கலீலுர் ரஹ்மான் அவர்கள் இன்று தனது 50ஆவது வயதில் காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


கடந்த 25 வருடங்களாக நாட்டின் பிரதான ஊடகங்களில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்த சகோதரர் ஏ.சீ.எம். கலீலுர் ரஹ்மான் அவர்களது இழப்பு இத்துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிறந்த குரல் வளம், தமிழ் மொழி உச்சரிப்பு, அவரது ஆற்றல் என்பவற்றின் காரணமாக இந்த நாட்டின் பிரதான அரச ஊடகங்களில் முக்கிய அறிவிப்பாளராக திகழ்ந்தார். துறைமுக அதிகார சபையில் பணி புரிந்து கொண்டு பகுதி நேரமாக ஊடகப் பணியை சிறப்பாக மேற்கொண்டு எல்லோரதும் பாராட்டைப் பெற்ற ஒருவராவார்.


எவருடனும் முரண்படாது மென்மையாகவும் இனிமையாகவும் பழகக்கூடிய ஒருவர். ஆராவாரமின்றி, பெருமையின்றி நிதானமாக இத்துறையில் பணி புரிந்த சகோதரர் கலீலுர் ரஹ்மான் அவர்களிடமிருந்து ஊடகத் துறை இளைய தலைமுறையினர் கற்றுக் கொள்ளக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.


இத்துறையில் இன்னும் பல வருடங்கள் சிறப்பாக பணியாற்றக்கூடிய ஆளுமையான அவர், இறைவனின் தீர்ப்பை ஏற்று எம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்.


அவருடைய மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறது. அவரது மறுமை வாழ்வு வெற்றி பெற பிரார்த்திக்கிறது.


வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து அவரது அத்தனை நற்கருமங்களையும் ஏற்று அங்கீகரித்து உயர்ந்த சுவனபதியை வழங்குமாறும் அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய பொறுமையை வல்ல இறைவன் வழங்கவும் பிரார்த்திப்போமாக!


நன்றி

 

என். எம். அமீன்                                                                                                                                                                   

தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்                                                                                                   

05.10.2020

1 comment:

Powered by Blogger.