தேர்தல்கள் ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு
(ஆர்.விதுஷா)
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் குறிப்பிட்ட ஒரு கட்சியை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் சேறுபூசும் நடவடிக்கைகள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளர் சுஜீவ சேனசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை -25- முறைப்பாடு செய்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,
தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டத்தையும் , அரசியலமைப்பையும் மீறி முன்னெடுக்கப்படும் கட்சி சார்பான , அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்படும் குழுவின் ஊடாகவே பல சந்தர்பங்களில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு எதிராகவும் , சில வேட்பாளர்களுக்கு எதிராகவும் தொடர்ந்தும் சேறு பூசும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த ஒரு குழுவினராலோ நபர்களாலோ இவ்வாறாக ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் அளிக்கப்படுவதுடன், இந்த முறைப்பாடுகள் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தவும் படுகின்றன.
வேட்பாளர் ஒருவரின் நற்பெயரிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதற்கு ஊடகம் உட்பட எவருக்கும் உரிமையில்லை . ஆகவே , இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தோம்.
தேர்தல்கள் ஆணையாளரும் இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டதுடன், இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைளை முன்னெடுப்பது என்பது குறித்து அவதானம் செலுத்துவதாகவும் எமக்கு உறுதியளித்திருந்தார்.
Post a Comment