ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் உத்தரவை இரத்துச் செய்த நீதிமன்றம்!
(எம்.எப்.எம்.பஸீர்)
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் உத்தரவை நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதன் ஊடாக அவருக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பதை அவதானித்த கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க, கடந்த 18 ஆம் திகதி, ஹிஜாஸை நேற்றைய தினத்தில் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர் செய்யுமாறு விடுத்த உத்தரவையே இரத்துச் செய்தார்.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற முறைப்பாட்டாளர் தரப்பான சி.ஐ.டி. மற்றும் சட்ட மா அதிபர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று நிராகரித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நேற்று 24 ஆம் திகதி கோட்டை நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர் செய்யுமாறு, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க கடந்த ஜூன் 18 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது, இதுவரை சந்தேக நபராக பெயரிடப்படாத, சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், ரணிலா சேனாதீர, சஞ்சீவ, ஹசான் நவரத்ன பண்டார ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார ஆஜரானார்.
Post a Comment