Header Ads



இனி பிழைக்க மாட்டேன் என நினைத்தேன், எனது மரணத்தை அறிவிப்பதை வைத்தியர்கள் தயார் செய்தனர்

கொரோனா பாதிக்கப்பட்டு தான் சிகிச்சையில் இருந்தபோது என் இறப்பை அறிவிக்க வைத்தியர்கள் திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், கடந்த மார்ச் மாதம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின்னர், மீண்டு வந்தார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நாட்கள் குறித்து ‛தி சன்' ஊடகத்திற்கு போரிஸ் ஜோன்சன் அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் போரிஸ் ஜோன்சன் மேலும் குறிப்பிடுகையில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கடினமான தருணம். நான் அதை எப்போதும் மறுக்கமாட்டேன். அப்போது நான் அவ்வளவு சுயநினைவுடன் இல்லை.

ஆனால் என்னைக் காப்பாற்ற தற்செயலான திட்டங்கள் மட்டுமே வைத்தியர்களிடம் இருந்தது. அவர்கள் எனக்கு ஒரு முகமூடியைப் பொருத்தி, அதன் மூலம் பல லீட்டர், லீட்டராக  ஒக்சிஜன் ஏற்றினர்.

என் மூக்கு செயல்படும் தன்மையை இழந்தது. அந்த நேரத்தில் நான் இறந்துவிட்டால் அதை எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் வைத்தியர்கள் தயார் செய்து வைத்திருந்தனர். 

இந்த நிலையிலிருந்து எப்படி வெளியேறப்போகிறேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். 

ஒரு சில நாளில் என் உடல்நிலை இன்னும் மோசமடைந்ததால், இனி பிழைக்கப்போவதில்லை என நினைத்தேன். 

எதனால் உடல் இவ்வளவு மோசமானது என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. வைத்தியர்களும் தாதியர்களும் மிகவும் கடுமையாகப் போராடி என் உயிரை மீட்டுக்கொண்டு வந்தனர். 

அவர்களின் அற்புதமான செயலால் தான் நான் இன்று மீண்டுவந்தேன். எனவே, அவர்களுக்கு எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன். என அந்தப் பேட்டியில் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.