Header Ads



5 ஆயிரம் ரூபா வழங்கப்படாததால், மக்கள் போராட்டம் - ஜனாதிபதியிடம் நீதி வழங்க கோரிக்கை


பத்தனை, கிறேகிலி தோட்டத்தில் வாழும் மக்கள் இன்று (05.05.2020) மதியம் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படவில்லை என்றும், பக்கச்சார்பான முறையிலேயே பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.

எனவே, இது விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி தமக்கு நீதியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் தொடர் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, நாளாந்த வருமானத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

சமூர்த்தி பயனாளிகள், முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள், அங்கவீனர்களுக்கான கொடுப்பனவை பெறுபவர்களுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும், நாள் கூலியை இழந்தவர்களும் இதனை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டது.

எனினும், " தமது தோட்டத்தில் வாழும் மக்களுக்கு உரிய வகையில் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை. விதவைப்பெண்கள்கூட புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கட்சி, தொழிற்சங்க அடிப்படையிலேயே ஒரு சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச அதிகாரிகள்கூட மனிதநேயமற்ற விதத்தில் செயற்படுகின்றனர்." - எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

அதேவேளை, தோட்டத்தில் உரிய வகையில் வேலை வழங்கப்படுவதில்லை. 18 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் அரைநாள் பெயரே போடப்படுகின்றது.  750 ரூபா சம்பளத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கை முன்னெடுக்க முடியாது. எனவே, 5000 ரூபா வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments

Powered by Blogger.