Header Ads



சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு, காணொளி மூலம் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன், தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் 20 திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி. றிஸ்வான் நேற்று (06.04.2020) உத்தரவிட்டார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் அம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்த  64 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில் 59 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்படடுள்ளனர்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் சகோதரி மற்றும் சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் உட்பட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் குறித்த 4 வெவ்வேறு வழக்கு இலக்கங்களை கொண்ட 63 பேரின் வழக்குகள் நேற்று திங்கட்கிழமை மட்டு நீதவான் நீதிமன்றில்  இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள  கொரோனா வைரஸ் காரணமாக நீதிபதியின் ஆலோசனைக்கமைய சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்பாட்டில்  காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் 63 பேரையும் எதிர்வரும் 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.