Header Ads



உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் அந்த முடிவை முழு மனதோடு நான் ஏற்றுக்கொள்கிறேன்

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த நான்கரை வருட காலப்பகுதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எனது கடமைகளை எனது மனசாட்சிக்கு இணங்க சிறப்பாக செய்ய உதவிய, ஆலோசனை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றம் நேற்றைய தினம் நள்ளிரவில் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட இந்த நான்கரை வருடங்களில் தனியே அபிவிருத்தியையோ, தனியே சமூகத்தின் குரலாகவோ அன்றி அபிவிருத்தியையும், சமூகத்தின் உரிமை குரலையும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சமாந்தரமாக இன, மத, பிரதேச, கட்சி வேறுபாடு இன்றி முன்னெடுத்ததாக நம்புகிறேன்.

இந்த நான்கரை வருட காலப்பகுதியில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இன்றி எதுவித மேலதிக சொத்துக்களோ, எதுவித அனுமதிப் பத்திரங்களோ எனது பெயரிலோ, எனது நெருக்கமானவர்கள் பெயரிலோ பெறாமல் எனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயற்பட்டதை இட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

என்மேல் பல எதிர்பார்ப்புக்களை வைத்து கடந்த தேர்தலில் 32000 இற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்திருந்தார்கள், உண்மையில் அனைவருடைய எதிர்பார்ப்பையும் என்னால் பூர்த்தி செய்யாவிட்டாலும் என்னால் முடியுமான அளவு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாக நம்புகிறேன்.

ஆகவே இந்த நான்கரை வருட காலப்பகுதியில் எனக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து கொள்வதோடு எனது செயற்பாடுகள் உங்களுக்கு திருப்தி அளித்திருப்பின் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் உங்கள் ஆதரவை கோருகிறேன்.

உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் அந்த முடிவை முழு மனதோடு நான் ஏற்றுக்கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.