Header Ads



கொரோனா லீவில் வீட்டில் தங்கி, இருக்கும்போது என்ன செய்யலாம்..?

- அஷ்ஷைக் பளீல் -

கோரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், டியூட்டரிகள் போன்றன மூடப் பட்டிருப்பதால் மாணவர்கள் பெரும்பாலும் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். பொதுமக்களும் கூட பொது சந்திப்புகள் தடைசெய்யப்பட்டு இருப்பதாலும் வழிபாட்டுத் தலங்களும் வேலைத்தளங்களும் மூடப்பட்டிருப்பதால் பெரும்பாலும் எல்லோரும் போல வீடுகளுக்குள் முடங்கிக் விட்டார்கள்.

தற்போது பெரும்பாலும் என்ன நடக்கிறது? 

1. அதிக தூக்கம்

2. குறைந்தது ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவையாவது கொரோனா நோயின் பரவல் உலகிலும் இலங்கையிலும் எப்படி இருக்கிறது என்பது பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்து கொள்வதற்கும் தெரிந்து கொண்டதை மற்றவர்களுக்குப் பகிரவும் முயற்சிப்பது.

2. வழக்கத்தை விட அதிகமாக தொலைபேசியிலே உரையாடிக் கொள்வது. 

3. சினிமா பார்ப்பதிலும் அல்லது வீணான காரியங்களிலும் நேரத்தை கடத்துவது.

எனவே, முதலில் தவிர்க்க வேண்டிய அம்சங்கள் யாவை எனப் பார்ப்போம்:-

1.வதந்திகளைப் பரப்புவது அல்லது தகவல்கள் கிடைத்த மாத்திரத்தில் அவற்றை ஊர்ஜிதம் செய்யாமல் பரப்புவது

2.வீட்டில் இருப்போரோடு முரண்பட்டுக் கொள்வதும் அவர்களுக்குத் தொந்தரவாக இருப்பதும்

3. அதிக தூக்கம் 

4. சினிமா பார்ப்பது 

5. தற்போது தேர்தல் காலமாக இருப்பதால் அதனுடன் சம்பந்தப்பட்ட தேவையற்ற கதையாடல்கள் விமர்சனங்கள்

6. கொரோனா பற்றிய தகவல்களை சிறார்களுடன் அளவு மீறிச் பகிர்வது(இது அவர்களை மானுஷீகமாகப் பாதிக்கலாம்)

வீட்டில் தங்கி இருப்பது, தொழிலில் இருந்து தூரமாக இருப்பது பள்ளிவாயல்களுக்கு போக முடியாமல் இருப்பது பெரும் சவால் தான். எனவே இந்த சவாலை (Challenge) எப்படி சந்தர்ப்பமாக  (Opportunity) பயன்படுத்தலாம் ?

எந்தவொரு சவாலையும் அல்லாஹ் தருவது நாம் அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்துகிறோமா என்பதனை பரீட்சிப்பதற்காகத் தான். எனவே வீட்டில் தங்கி இருத்தல் என்ற இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளலாம்?

வீட்டில் தங்கி இருப்பவர்களுக்கான ஒரு திட்டம் (அது தற்காலிகமானதாக இருந்தாலும்) அவசியமாகும்.

பொருத்தமான ஒரு திட்டத்தை இவ்வாறு முன்மொழியலாம்:-

1. பாங்கு சொல்லப்பட்டவுடன் ஐவேளை தொழுகையை வீட்டில் ஜமாஅத்தாகத் தொழுவது. வீட்டில் தொழுகை நடத்துபவர் ஆலிமாக இருக்க வேண்டியதில்லை. ஆலிம் இருந்தால் அவர் நடாத்துவார். இல்லாத போது யாரோ ஒருவர் நடாத்துவார்.பெண்கள் மாத்திரம் இருக்கும் போது பெண்களில் ஒருவர் இமாமாக இருக்கலாம்.

2. குர்ஆன் ஓதுவது, மனனமிடுவது. காலை-மாலை அவ்ராதுகள் மற்றும் சந்தர்ப்ப துஆக்களை ஓதுவதும் இதுவரை மனனமில்லாதவர்கள் மனனமிடுவதும். கூட்டாகவும் தனியாகவும் இந்த அமல்களைச் செய்யலாம்.

3. வீட்டில் எல்லோருமாக அமர்ந்து குறைந்தது அரை மணித்தியாலம் தஃலீம் வாசிப்பது. அது தப்ஸீர், ஹதீஸ் நூலாகவும் இஸ்லாமிய நூலாகவும் அல்லது பொது அறிவு நூலாகவும் இருக்கலாம். இதற்காக முன்கூட்டியே ஒருவரைத் தயாராக இருக்கும் படி கேட்டுக் கொள்ளலாம். உதாரணமாக, இன்று இன்னார் ஏதாவது ஒன்றை வாசிக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஒருவரைத் தயார் செய்வது.

4. வீட்டைத் துப்புரவு செய்வதும் தளபாடங்களை ஒழுங்குபடுத்துவதும்.

5. வீட்டுத் தோட்டத்தை துப்பரவு செய்வது, அங்கு ஏதாவது பயிரிடுவது, பூமரங்களை நடுவது.

6. சிறுவர்களுக்கு கற்பிப்பது, அவர்களது பயிற்சிகளை எடுத்துப் பார்ப்பது, அவர்களை உற்சாகப்படுத்துவது,

7. வீட்டில் இருப்பவர்களோடு மிகவும் சந்தோஷமாகப் பழகுவது, பேசுவது, நல்ல விடயங்களை உரையாடுவது.

8. உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது

9. தொலைக்காட்சியில் தெரிவுசெய்த நிகழ்ச்சிகளை மாத்திரம் பார்ப்பதும் அதற்காக நேரங்களை மிகக் கவனமாக எடுத்துக் கொள்வதும்.

10. உறவினர்களுடனும் நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடி உறவுகளை பலப்படுத்துவது.

11. பலர் தொழில்களை இழந்து அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு தொலைபேசியில் உரையாடி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுப்பது.

எனவே நேரத்தை நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்வோமாக!

நேரம் = வாழ்வு

நேரம் பொன்னானது. காலத்தோடு, நேரத்தோடு சம்பந்தப்பட்ட பல சத்தியங்கள் குர்ஆனில் வந்திருக்கின்றன. 
والعصر 
 والليل اذا يغشى والنهار اذا تجلى
 والشمس وضحاها والضحى والليل اذا سجى والفجر والنجم 

காலத்தின் மீது சத்தியமாக!
இரவு மீது சத்தியமாக!
பிற்பகல் மீது சத்தியமாக!
சூரியன் மீது சத்தியமாக!
அதிகாலையின் மீது சத்தியமாக! நட்சத்திரம் மீது சத்தியமாக!

எனவே, நாம் நேரத்தின், காலத்தின், வாழ்நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும்.

: قال النبي صلى الله عليه وسلم:
((نعمتانِ مغبونٌ فيهما كثيرٌ من الناس: الصحة والفراغ))؛ رواه البخاري

Messenger of Allah (ﷺ) said,
"There are two blessings in which many people incur loss. (They are) health and free time (for doing good)".[Al-Bukhari]
       
"மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கள் விடயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். அவை 
ஆரோக்கியமும் ஓய்வும்"
 என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

: قال رسول الله صلى الله عليه وسلم:
((لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن عمره: فيمَ أفناه؟ وعن علمه: فيمَ فعل؟ وعن ماله: من أين اكتسبه؟ وفيم أنفقه؟ وعن جسمه: فيمَ أبلاه؟)) رواه الترمذي وصححه

"மறுமை நாளில் பின்வரும் கேள்விகள் அடியானிடத்தில் தொடுக்கப்படும் வரைக்கும் அவனது இரண்டு பாதங்களும் இருக்கும் இடத்தை விட்டு நகரமாட்டாது:-

1.அவனது வாழ்நாளைப் பற்றி:- அதனை எதில் கழித்தான்.
2. அவனது அறிவைப் பற்றி:- அதனைப் பயன்படுத்தி எதனைச் செய்தான்.
3. அவனது பணத்தைப் பற்றி:- எங்கிருந்து அதனைச் சம்பாதித்தான், அதனை எதிலே செலவிட்டான்.
4.அவனது உடலைப் பற்றி:- அதனை எதற்காகப் பயன்படுத்தினான்.
(ஆதாரம்: திர்மிதி)

 Messenger of Allah (ﷺ) said,
 "Man's feet will not move on the Day of Resurrection before he is asked about his life, how did he consume it, his knowledge, what did he do with it, his wealth, how did he earn it and how did he dispose of it, and about his body, how did he wear it out."[At-Tirmidhi].

காலம் பொன்னானது. ஒவ்வொரு செயல்களும் மிகப் பெறுமதியானவை. எனவே, காலத்தை வீணடிக்கக் கூடாது. அதனை தங்கத்தை விட, மாணிக்கத்தை விட பெறுமதியாகக் கணித்து, நாம் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது என்ற உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பது மனிதன் காலத்தோடு நடத்தும் ஒரு போராட்டமாகும். அதை விரயம் செய்வது தனிமனிதனதும் சமுதாயத்தினதும் இம்மை, மறுமை வாழ்வைப் பாழ்படுத்தி விடுவதாகும். ஒரு முஸ்லிம் தனது செல்வத்தில் சிறு பகுதியைக் கூட ஆழ்ந்து, சிந்தித்து கணக்குப் பார்க்காமல் செலவிடமாட்டான். அதைவிடவும் நேரத்தைச் செலவிடுவதில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

மேலதிக வாசிப்புக்காக நேரமுகாமைத்துவம் தொடர்பான வேறு இரு ஆக்கங்கள்:-



எனவே  வீட்டில் இருக்கும் இக்காலப் பிரிவை இன்ஷா அல்லாஹ் நன்கு திட்டமிட்டு பயனுள்ள விடயங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு உலக மறுமைப் பயன்களை அடைந்து கொள்ள முயற்சி செய்வோமாக. 

யா அல்லாஹ் அதற்காக எமக்கு உதவி செய்வாயாக!

No comments

Powered by Blogger.