கேணல் ரட்ணபிரிய, வன்னியில் போட்டி
தமிழ் மக்கள் மத்தியிலே எனக்கு பூரண ஆதரவு இருக்கின்றது. எதிர்வரும் தேர்தலில் நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் என்று இலங்கை இழப்பீட்டு காரியாலத்தின் முன்னாள் ஆணையாளரும், பாராளுமன்றதேர்தல் வேட்பாளருமான கேணல் ரட்ண பிரிய தெரவித்தார்.
வவுனியாவிற்கு இன்றையதினம் விஜயம் செய்த அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்ததுடன் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நான் வடக்கு பகுதியிலே இராணுவத்தில் கடமையாற்றுகின்ற போது முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு தமிழ்மக்களுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு பல உதவிகளை இந்த வன்னி பகுதியிலே செய்திருக்கின்றேன். அத்தோடு பாடசாலைகளுக்கான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றேன்.இன மத பேதமின்றி தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு இந்த பகுதியிலே நான் களம் இறங்கியிருக்கின்றேன்.
ஜனாதிபதி கோட்டபாஜராஜபக்சவின் வழிகாட்டுதலின் கீழ் அவருடைய கொள்கையின் அடிப்படையிலே நான் வன்னி நிலப்பரப்பிலே தமிழ் மக்களோடு இணைந்து சேவையாற்றுவதற்காக முன்வந்திருக்கிறேன்.
நிச்சயமாக எனக்கு இந்த பகுதியிலே உள்ள மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கான தேவைகளை கண்டறிந்து அடிப்படை தேவைகள் மற்றும் அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்றும் நோக்கோடு நான் இந்த பகுதியிலே களம் இறங்குகிறேன்.
நிச்சயமாக நான் வெல்லுவேன். வன்னி பகுதியிலே தமிழ் மக்களுடைய பூரண ஆதரவு எனக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கையோடு ஜனாதிபதியினுடைய ஆதரவோடும் நான் இந்த மண்ணின் பிரதேசங்களிலே என்னுடைய செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment