Header Ads



அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருக்கும் இடத்தில், எவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்துவது?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களுடைய எதிர்பார்ப்புக்களும் இன்று தவிடுபொடியாகிவிட்டதாக ஜே.வி.பி தெரிவிக்கின்றது.

ஆர்ப்பாட்டம் செய்வதற்காக உரிமையைக்கூட புதிய அரசாங்கம் பறித்திருப்பதாக சாடிய ஜே.வி.பியின் தொழிற்சங்கப் பிரிவுத் தலைவரான கே.டி.லால்காந்த, அவசியமாக இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மக்கள் செய்யலாம் என்றும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கப் போராட்டங்கள் உட்பட பலவிதமான ஆர்ப்பாட்டங்களை செய்வதற்காக கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஒருபகுதியை ஒதுக்கியுள்ளார்.

கொழும்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அம்பியூலன்ஸ் வண்டி, தொழிலுக்கு செல்வோர் மற்றும் திரும்புவோர் உட்பட மக்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடியை தவிர்ப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய இந்த முடிவை எடுத்திருப்பதாக

அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருக்கின்றார்.

எனினும் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை நிராகரித்த பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினமும் காலி வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கண்டியில் வைத்து தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் தொழிற்சங்கப் பிரிவுத் தலைவரான கே.டி.லால்காந்த, ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையையும் கோட்டாபய அரசு பறிப்பதாக தெரிவித்தார்.

“உண்மையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 69 இலட்சம் வாக்குகளை அளித்த மக்களின் எதிர்பார்த்துப்புகள் இல்லாமல் போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச அர்த்தபுஷ்டியான நடவடிக்கையை எடுப்பார் என்றுதான் மக்களும் நம்பினார்கள்.

ஆனால் அதற்கான பொறுப்பினை மஹிந்த ராஜபக்சவின் பக்கம் சாரும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மஹிந்த ராஜபக்ச உறுதியாக தீர்மானம் ஒன்றை எடுக்கவிடாமல் தடுக்கின்றார் என்ற பொய்யான சிந்தனையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

இது கோட்டாபய – மஹிந்த இணைந்த ஆட்சியாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மஹிந்த, கோட்டாபய, பெசில் ஆகியோர் நல்லவர்களா கெட்டவர்களா என்பது நாட்டிற்கு அவசியமாகாது. மாறாக இந்த நாட்டின் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க இந்த அரசாங்கத்தினால் முடியாமற் போயுள்ளது.

உதாரணமாக வாழ்க்கைச் செலவு உச்சமடைந்துள்ளது. தேங்காய் 80 ரூபாவரை செல்கிறது, அத்தியாவசிய பொருட்களும் அவ்வாறே. மக்களின் நிவாரணத்திற்காக தீர்மானம் எடுக்க அரசாங்கம் தவறிவிட்டது. பள்ளத்தில் செல்லும் வாகனத்திற்கு நிறுத்தக்கருவி செயலிழந்துவிட்டால் எவ்வாறு வேகமாக கட்டுப்பாடு இன்றி செல்லுமோ அதேபோலதான் இந்த அரசாங்கத்தின் நிலையும்.

ஆர்ப்பாட்டம் என்கிற தொழிற்சங்க உரிமையை புதிய அரசாங்கம் இன்று கொச்சைப்படுத்தியுள்ளது. தேவை ஏற்படுகின்ற

இடத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல் மாறாக அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருக்கும் இடத்தில் எவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்துவது? அராசங்கத்தின் இந்த முறையை நாங்கள் முற்றிலும் எதிர்க்கின்றோம்” என்றார்.

No comments

Powered by Blogger.