ஈரான் - அமெரிக்க பதற்றம், இலங்கைக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாகாது - இராணுவ தளபதி
(எம்.மனோசித்ரா)
ஈரான் – அமெரிக்க பதற்றம் எவ்விதத்திலும் இலங்கைக்கு அச்சுறுத்தலாகாது. அவ்வாறு அழுத்தங்கள் ஏற்படுவதற்கான காரணியும் இல்லை என்று தெரிவித்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை மிகச் சிறிய நாடு என்பதால் சர்வதேச பிரச்சினைகளில் தலையிடாது சுமுகமாகச் செயற்படுவதே சிறந்த வழி என்றும் குறிப்பிட்டார்.
வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக பாதிப்புக்குள்ளான உயிரிழந்த மிருகங்கள் மற்றும் நபர்களுக்காக பிரார்த்திக்கும் மத வழிபாட்டு நிகழ்வு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், பயிற்சிப் பாடசாலைகள் போன்றவற்றை உள்ளடக்கி செவ்வாய்க்கிழமை களனி ரஜமஹா விகாரையில் பூஜை நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வு பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
கேள்வி : அமெரிக்க ஈரான் பதற்றம் உக்கிரமடைந்துள்ளது. இதனால் அமெரிக்காவுடன் இலங்கை செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் ஏதேனும் நெருக்கடிகள் ஏற்படுமா?
பதில் : இல்லை. அவ்வாறு எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படாது. அவ்வாறு ஏற்படுவதற்கு ஏதுவான காரணிகளும் இல்லை.
கேள்வி : சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகளவான இலங்கை மக்கள் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர். அவ்வாறு வெளிநாடு களில் தொழில் புரிபவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமா?
பதில் : சில நாடுகளுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் பணி புரிபவர்களும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. எனினும் உரிய நேரத்தில் அவை தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் பிரச்சினைகள் ஏற்படும் என்று நாம் எண்ணவில்லை. எமது நாடு மிகச் சிறியது. எனவே நாம் எந்தப் பிரச்சினையிலும் தலையிடாது சுமுகமாக செயற்பட வேண்டும்.
கேள்வி : ஈரான் – அமெரிக்க மோதலால் இலங்கைக்கு ஏதேனும் அழுத்தங்கள் பிரயோ கிக்கப்படுமா?
பதில்: ஈரான் - அமெரிக்க மோதல் இலங்கைக்கு எவ்விதத்திலும் அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ ஏற்படுத்தாது என்றார்.
Post a Comment